முதல் திருமொழி
(2032)
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!
(2033)
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.
(2034)
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.
(2035)
கேட்கயா னுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!
(2036)
இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.
(2037)
மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?
(2038)
இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந் த சோலை வியந்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே.
(2039)
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டி னாரே.
(2040)
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர் தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே.
(2041)
சித்தமும் செவ்வை நில்லா தெஞ் சய்கேன் தீவி னையேன்,
பத்திமைக் கன்பு டையேன் ஆவதே பணியா யந்தாய்,
முத்தொளி மரத கம்மே முழங்கொளி முகில்வண் ணா,என்
அத்த நின் னடிமை யல்லால் யாதுமொன் றறிகி லேனே.