(3250)

(3250)

நங்கைமீர். நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,

எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,

சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,

இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?

 

பதவுரை

நங்கைமீர்

மாதர்காள்!

நீரும்

நீங்களும்;

ஓர் பெண் பெற்று நல்கினீர்

ஒவ்வொரு பெண்ணைப் பெற்று அன்போடு வளர்த்தருக்கின்றீர்கள்;

யான் பெற்ற

நான் பெற்றிருக்கின்ற

ஏழையை

இப்பேதையை

எங்ஙனே சொல்லுவேன்

எப்படியென்று சொல்லுவேன் (ஆகிலும் கொல்லுகிறேன்;

சங்கு என்னும்

சங்கு என்கிறாள்;

சக்கரம் என்னும்

சக்கரமென்கிறாள்;

துழாய் என்னும்

திருத்துழாயென்கிறாள்;

இராப்பகல்

இரவும் பகலும்

இங்ஙனே சொல்லும்

இப்படியே சொல்லுகின்றாள்;

என் செய்கேன்

யாது செய்வேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என் மகள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களைச் சொல்லுவதற்காகத் தொடங்கி முற்றமுடியச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்ந்து நோவுபடுகின்றாளென்கிறாள்.  பராங்குச நாயகயின் திருத்தாய் தனது தோழிமார்களை நங்கைமீர் என்று விளித்து ‘நீங்களும் ஒவ்வொரு பெண்பிள்ளை பெற்று வளர்க்கிறீர்களே, என் பெண்மகளின் தன்மை உங்கள் பெண்களுக்கு உண்டோ?’  என்றாள்; ‘எங்கள் பெண்பிள்ளைகளிற் காட்டிலும் உன் பெண்பிள்ளைக்கு வாசி என்?’ என்று அவர்கள் கேட்க, எங்ஙனே சொல்லுகேன்? என்கிறாள். இவள்படி பேச்சுக்கு விஷயமாகிலன்றோ நான் சொல்லுவது; பகவத் குணங்களை ஒருபடி பேசினாலும் குணங்களிலே ஆழ்ந்தவர்களின்படி பேச்சுக்கு நிலமன்றே; “ஆஹ்லாதசீதநேத்;ராம்பு: புலகீக்ருதகாத்ரவாந், ஸதா பாகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ்ஸர்வதேஹிபி:” என்கிறபடியே கண்டிருக்கலாமத்தனை யல்லது பேசமுடியாததன்றோ என்கிறாள்.

ஆனாலும் பேசக்கூடியமட்டில்; பேசலாகாதோ என்ன; பின்னடிகளால் பேசுகிறாள். சங்கு சக்கரம் என்றிப்படி பகவத் வஸ்துக்களைச் சொல்ல நினைத்தவிவள் அவற்றை ஒரு நேர்த்தியாகச் சொல்லமாட்டாமல் ‘சங்கு’ என்று சொல்லி, அது தான் மலை யெடுத்தாற்போலே யிருக்கையாலே பெருவருத்தத்தோடே நின்று, மீண்டும் ஒரு நாளிகை கழித்து ‘சக்கரம்’ என்று சொல்லி, அதன் பிறகு ஒரு நாழிகை கழித்து ‘துழாய்’ என்று சொல்லி ஆக இப்பாடுபடா நின்றாள் என்கிறாள்.

 

English Translation

O Ladies, you too have daughters whom you bring up with love, How shall describe my jioor.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top