(2655)
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
பதவுரை
|
தனி நின்ற |
– |
தானொருவனுமே காரணமாய் நின்றவனும் |
|
சார்வு இலா |
– |
வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான |
|
மூர்த்தி |
– |
எம்பெருமானே! |
|
அகத்து பனி நீர் உலவு செம்சடையான் |
– |
உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன். |
|
ஆகத்தான் |
– |
உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்; |
|
நான்கு முகத்தான் |
– |
நான்முகக் கடவுள் |
|
நின் உந்தி முதல் |
– |
உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்; |
|
இனி |
– |
இப்படியான பின்பு |
|
நின் பெருமை |
– |
உனது மேன்மையை |
|
யான் நின்று உரைப்பது என்னே |
– |
தான் முயன்று சொல்வது எங்ஙனே? |
|
(என்னால் சொல்லப்போகாதென்கை) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில். இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே, என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற; பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.
தனி நின்ற சார்விலாமூர்த்தி = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து ****** எகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம் மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்; நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.
(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்; நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்; இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.
ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின் ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்; “ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்; “அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.
நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால். நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.
English Translation
Siva with Ganga in his mat-hair, occupies a corner in your person. Brahma seated on a lotus has his origin in you. O Lord with a frame that has neither a peer nor superior! What can I say to praise your glory?
