(2545)

(2545)

மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்

புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்

நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்

கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே.

பதவுரை

பொரு கடல் சூழ்

அலைமோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்

பூலோகத்தை
தாவிய

அளந்தருளின
எம்பெருமான் தனது

எம்பெருமானுடைய
வைகுந்தம்

ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்

ஒத்துவிளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர்கொண்டு

(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்

வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனை

கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்

மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்

பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழைபந்தர்

மநோஹரமான தழைகளர் சிறு பந்தலிலே
தண்டு

கொம்புகளிலே
உற

நெருங்க
நாற்றி

தொங்கவிட்டுக்கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில

முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டுக்குத் துறைகாலமயக்கு: காலம் இளையது என்றல். நாயகனே நாயகியை விட்டு நீங்கும்போது கார்காலத்திலே மீண்டு வருவேனென்று காலங் குறித்துச் சென்றானாய் அக்காலம் வந்தவளவிலும் தான் வாராதிருக்க, கொன்றை மரங்கள் பூக்கத் தொடங்கியதை நோக்கிக் “கார்காலம் வந்துவிட்டதே, இன்னமும் நாயகன் வரவில்லையே’ என்ற நாயகி கலங்காநிற்க, அது கண்ட தோழி ‘நங்காய்! கார்காலம் வந்ததன்றுகாண்; பிரிந்துசென்ற நாயகருடைய வருகையை முற்பட எதிர்நோக்கிக் கொண்டு நமது மகிழ்ச்சியால் கொன்றைகள் தாமாக அரும்பிநின்றன; அதுவேயன்றிக் காலம் வந்து நன்கு மலர்ந்தனவில்லை’ என்று காலத்தை மயக்கிக்கூறி அவளை ஆற்றுவிக்கிறாள்: “காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு, இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது” எனத் துறையிலக்கணங் காண்க:

இங்கே நம்பிள்ளை யீடு:- “கலந்துபிரிந்த தலைமகன் கொன்றை பூக்குங் காலத்திலே வருகிறேனென்று காலந் குறித்துப்போனானாய், அக்காலம் வந்து அவையும் பூக்கச் செய்தே அவன் வாராமையாலே தலைமகள் தளர, அத்தைக்கண்ட தோழியானவள் அக்காலமல்ல வென்ன வொண்ணாதபடி அது முடுகிக்கொடு நிற்கையாலே ‘இவை பூக்க உத்யோகிக்கிற வித்தளை; பூத்துச் சமைந்தளவில்லை காண்; ஆனபின்பு அவனும் வந்தானத்தனை, நீ அஞ்சாதே கொள்’ என்று அவளை ஆச்வஸிப்பிக்கிறாள். அக்காலமல்லதாணென்னுமே தோழி; நெடுவாய், இவை இங்ஙனே மலரா நிற்க அல்லகாணென்னும்படி எங்ஙனே யென்ன, மலர உபக்ரமிக்க வித்தகனைகாண், மலர்ந்து சமைத்ததில்லை காண் என்கிறாள்” என்று. இதனால் காலம் இளையதென்றவாறாம்.

மாலைகளாகவும் பொன்மாலையாற் சமைந்த வட்டம்போலே சுருளவும் கொன்றை பூந்தலால் ‘மாலையும் மாலைப் பொன்வாசிகையும்’ எனப்பட்டது. தழைத்த மரங்களிலே கிளைகளில் அம்மலர் அடரத் தொங்குதல் பந்தலிற் கொம்புகளினிடையிலே தொங்கவிட்டவை போலுதலால் ‘தழைப்பந்தர் தண்டுற நாற்றி” எனப்பட்டது. இத்தழையைக் கண்ட கண்வேறொன்றிற் செல்லமாட்டாவை பற்றிப் புலந்தோய்தழை எனப்பட்டது ‘புலம்’ என்ற சொல் பொதுப்படையாக இந்திரியத்தைக் குறிப்பதாயினும், இந்திரியங்களுட் சிறந்தவுறுப்பான கண்ணை இங்குக் குறித்தது; ‘மலர்’ என்னும் பொதுச்சொல் சிலவிடங்களில் தாமரையைக் குறிப்பதுபோல. இனி, ‘புலம்’ என்பதற்கு நிலம் என்று பொருள் கொண்டு, தாரையிலே வந்ததோயும்படி கவிந்து செழித்துள்ள தழை என்று முரைப்ப.

வைகுந்தமன்னாய் = வைகுந்தம் எம்பெருமானுக்கே உரிய பொருளாதல்போல நாயகனுக்கே உரிய தன்மையுடையவளே! என்றபடி. இதனால், உன்னைப் பிரிந்து அவன் ஆற்றான் என்பது தோன்றும், பிரிந்திருக்கிற நிலையில் ‘பிரிந்தார்’ என்று குறிக்க வேண்டியிருக்க, அங்ஙனங்குறியாது ‘கலந்தார்’ என்ற பெயராற் குறித்தது என்னோவெனின்; உன்னோடே கலந்து உன் தன்மையை யறிந்தவர் உன்னை விட்டிருக்கமாட்டார் என்று ஆற்றுகைக்காகவாம். கலந்து உன் தன்மையை யறந்தவர் உன்னைவிட்டிருக்கமாட்டார் என்று ஆற்றுகைக்காகவாம். வரவெதிர்க்கொண்டு வன்கொன்றைகள் கார்த்தனவே = வாசியறியாத ஸ்தாவரங்களுங்கூட அவர் வரவிருப்பதைகண்டு அலராநிற்க, நீ தளரலாமோ? என்றபடி, நாம் மலரத்தொடங்கினால் இவள் கலங்குவளே என்னும் இரக்கமில்லாதன வென்பாள் ‘வன் கொன்றைகள்’ என்றாள் அன்றியும், ‘அவன் வரின் அரைக்கடவதாய் இல்லையாகில் தவிருமதாய் இப்படி அவன் வரவோடு தப்பாதான் கொன்றைகள்’ என்றுங்கொள்வர். கார்த்தன கருங்கொண்டன; என்றனை, அரும்பின் நிலையையே யொழிய மலரின் நிலையை அடைந்தில வென்கை; காலம் இளையதென்கைக்குச் சான்று இது. ‘கார்த்தன’ என்பதற்கு- கார்காலத்தைக் காட்டா நின்றன என்று பொருள் கொள்ளவுமாம்.

பந்தர்- ரகரலகரப்போலி. நாற்றி = நால் என்பதன் பிறவினையான காற்று – பகுதி; நாலல்- தொங்குதல்; று- பிறவி விகுதி

எம்பெருமானையும் எம்பெருமானடியார்களையும் எப்பொழுதுஞ் சேர்ந்து அநுபவிக்கலாயிருக்க, உரிய காலத்தில் அநபவிக்கப் பெறாமையால் ஆழ்வார்க்குண்டான தளர்ச்சியை அன்பர்கள் ஆற்றுதல் இதற்கு உள்ளுறைபொருள். எம்பெருமானுக்கே உரிய பொருளானவரே! உம்மை அவள் ஆட்கொள்ளாதொழியான்; எம்பெருமானது வரவு நேர்தலை முந்தி ஸூசிப்பிக்கிற காலம் தோன்றா நின்றது; ஆனால் அவன் வருங்காலம் இன்னும் அணுகிற்றில்லை என்று கூறி ஆற்றியபடி.

English Translation

O Friend of excellence like the Vaikunta of the lord who strode the ocean-girdled Earth! The konrail trees have sprouted buds, expecting your paramour’s return. But they have not yet flowered into strings of fresh blooms over a canopy of leaves and branches!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top