(2546)
காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்வருந் தேலுன் வளைத்திறமே
பதவுரை
| கார் |
– |
கருத்த |
| இருள் |
– |
இருளாகிய |
| ஏறு |
– |
எருதானது |
| செகில் |
– |
சிவந்த |
| சுடர் |
– |
ஸூர்யனாகிய |
| ஏற்றிற்கு |
– |
எருதுக்கு எதிரில் |
| உளைந்து |
– |
இளைத்து |
| வெல்வான் |
– |
(மீள) வெல்லும் பொருட்டு |
| போர் ஏற்று |
– |
போர் செய்வதை ஏற்றிக் கொண்டு |
| எதிர்த்தது |
– |
வந்து எதிரிட்டது. |
| நீர் ஏற்று |
– |
(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று |
| புவனி எல்லாம் |
– |
எல்லாவுலகங்களையும் |
| அளந்த |
– |
அளந்து கொண்ட |
| நெடிய |
– |
நீண்டவடிவமுடைய |
| பிரான் |
– |
தலைவன் |
| புன்தலை மாலை |
– |
அற்புதமான தன்மையையுடைய மாலைப்பொழுதிலே |
| அருளாவிடுமே |
– |
(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.) |
| வார் ஏற்றும் இன முலையாம் |
– |
கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்தஇளமை மாறாத தனங்களை யுடையவனே! |
| உன் வளை திறம் |
– |
உனது கைவளையின் நிமித்தமாக |
| வருந்தேன் |
– |
வருத்தப்படாதே. |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாலைப்பொழுது கண்டு மயங்கிய தலைவியைத்தோழி ஆற்றும் பாசுரம் இது. பிரிந்துபோனவர் வந்து சேர்வதற்கு உரியதும் போகத்துக்கு உரிய காலமான இரவின் தொடக்கமுமாகிய மாலைப்பொழுதுவரக் கண்டு இன்னமும் நாயகன் வந்திலனேயென்று நாயிக நோவுபட, அது கண்ட தோழி ‘இது நீ நினைக்கிற ஸந்தியா காலம் வந்ததன்று; இருளாகிய கறுத்த எருதுக்கும் ஸூர்யனாகிய சிவந்த எருதுக்கும் யுத்தம் நிகழ்கிறபடி காண்; நீ நினைக்கிறபடி உண்மையான மாலைப்பொழுதாயின், உலக முழுவதையும் பாதுகாக்கவல்ல அருளையுடைய தலைவன் உனக்கு அருள்செய்ய வாரா தொழிவனோ? அவன் வாராமையாலும் இதனை மெய்யான மாலைப்பொழுதன்றென்று நீ தெளிந்து கொள்ளலாம்; உன் கைவளைகள் கழன்றுபோவதைக் குறித்து நீ வருத்தப்படவேண்டா; அவை கழலவொண்ணாதபடி அவன் விரைவில் வந்தருளுவன்’ என்று கூறி ஆற்றுவிக்கிறாள்.
ஒரு கறுப்பெருதும் ஒருசிவப்பெருதும் தம்மில் எதிர்த்துப்போர் செய்கையில் முந்திச் செவ்வெருதுக்குத் தோற்ற காரெருத பிந்தி அதனை வெல்வதற்கு எதிரிட்டதென்கிறது. முதல் வாக்கியம். ரூபகத்தை அங்கமாகக்கொண்டு வந்த உத்ப்ரேக்ஷாலங்காரம் கொள்கை. ஸாயம் ஸந்திபாகாலமானது முழு வெளிச்சமும் முழு லிருளுமல்லாமல் இரண்டுங் கலந்து தோன்றுங் காலாமதலால் இங்ஙனம் வருணிக்கப்பட்டது; அதில் வரவர இருள்மலிட்டுப் பகலொளி குறைந்து போவதுபற்றி, காலையில் பகலுக்குத் தோற்ற இருள் இப்பொழுது அதனைவெல்லும் பொருட்டு வந்து மேலிட்டதெனக் குறித்தார்.
ஒருவன் ஒருவனிடத்துத் தோற்றுப்போனால் அவள் மறுபடியும் தக்க ஸமயம்பார்த்து மற்றவனை வெல்வதற்கு முயல்வதுஇயற்கை. இராவணன் போர்க்களத்திலே இராமபிரானது அம்புகட்கு இலக்காகிப் பட்டுப்போனவாறே மந்தோதரி வந்து நின்று புலம்புகிறாய் காண்மின்:- இந்த்ரியாணி புரா ஜீத்வா ஜிதம் த்ரிபுவநம் த்வயா- ஸமாத்பிரிவ தத் வைரம் அத்யதைரேவ நிர்ஜித்.” என்கிறாள்; அதாவது- இராவணனே! நீ முன்பு இந்திரியங்களையெல்லாம் வென்று அதனால் மூவலகையும் வென்றாய்; (இந்திரியங்களை நிக்ரஹித்துக் கொடுந் தவம்புரிந்து வரம் பெற்றமையால் மூவுலகும் வென்றனனாதலால் இங்ஙனம் கூறப்பட்டது.) அந்த இந்திரியங்கள் ‘இப்பாவி நம்மை இபபடி தலையெடுக்க வொட்டாமல் பண்ணிவிட்டானே; ஆகட்டும், தக்க ஸமயம் பார்த்து இவனைத் தலையமுக்குவோம்’ என்று நெஞ்சில் கறுக்கொண்டிருந்த அவை, இப்போது உனக்குப் பிரதிக்ரியை செய்துவிட்டன- என்றாள். (இந்திரியங்களை அடக்காமல் அவற்றுக்குப் பரவசப்பட்டு ஸீதையைக் கவர்ந்து வந்ததனால் உனக்கு இக்கேடு விளைந்ததென்றபடி) அப்படி இராவணனிடத்தில் இந்திரியங்கள் முதலில் தோற்று, பிறகு அவளைத் தோற்டித்ததுபோல, தொண்டரடிப்பொடியாழ்வார் முந்தித் தாம் இந்திரியங்களுக்குத் தோற்றுப்பொன் வட்டில் நிமித்தாமகச் சிறைப்பட்டிருந்த சினத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டிருந்து மையம் பார்த்து அவற்றைத் தாம் சிறைப்படுத்தினதாக “காவலில் புலனவைத்து” என்ற (திருமாலை) முதற்பரசுரத்தில் அருளிச்செய்கிறார். அப்படியே இங்கும் செவ்வெருதுக்கு முந்தித் தோற்ற காரெருது கறுக்கொண்டிருந்து இப்போது அதனைவெல்ல எதிரிட்டதாகக் கூறப்படுகிறது.
இருளையும் சுடரையும் ‘ஏறு’ என்றது, மேலெழுச்சியை யுடைமையால் மாலைப் பொழுது, பிரிந்த வருந்துவாரை மேலும் கலிகையால் ‘புன்தலைமாலை’ எனப்பட்டது. அன்று பகலுக்கும் இரவுக்கும் இடையிலே மிகச் சிறுபொழுதாய் விரைந்து கழியுந் தன்மையது எனினுமாம்.
நீரேற்று = ஸத்ய லோகத்திற் சென்ற திருவடியை விளங்குதற்குக் பிரமன் சேர்த்த தீர்த்த்தை அத்திருவடியிலேற்று என்றும் பொருள் கூறுவர்; “தாரேற்ற வெண்குடை மாவலி வார்க்கவும் தாமரைமேற், சீரேற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவுஞ் செம்பொன் முடி, காரேற்ற மேனியரங்கேசர் கையுங்கழவுமொக்க, நீரேற்றன வண் திருக்குறளாகி நிமிர்த்தவன்றே” (திருவரங்கத்துமாலை- 33.) என்ற ஐயங்கார் பாசுரம் இங்கு அறியத் தக்கது. நெடியபிரான் = (உலகளப்பதற்காக) நீண்ட வடிவங் கொண்டவன் என்றும், யாவரினும் மேம்பட்டவனென்றும் பொருள் கொள்ளலாம்.
புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடியபிரா னருளாவிடுமே?= “தாமஸப்ரக்ருதிகளானர் மேலிடப்புக்கால்வந்து உதவுமவன் தமஸ்ஸுத் தான் வந்து அநுபவிக்கப் புக்கால் விட்டிருக்குமோ?… தன் உடமையைப் பிறர் எனதென்று அபிமாநித்திருந்தால் தன்னை அர்த்தியாக்கி அவர்கள் பக்கலிலேயும் வந்து இரந்து கொள்ளுமவன். இரக்க வேண்டாதே தன் உடைமையேயான உன்னை விட்டிருக்குமோ?” என்றது- இப்படிப்பட்ட அழகையும், இளமையையும் அவன் விட்டிருப்பானோ? விரைந்து வந்திடுவன் காண் என்ற குறிப்பு. ‘வாரேற்ற இளமுலையாய்’ என்றும் பிரிக்கலாம்; பெயரெச்ச வீறு தொகுத்ல். வார் ஏற்ற = கச்சையணிந்த என்றபடி, ‘புலநம்’ என்னும் வடசொல் புவனியெனத் திரிந்தது.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது = தகுந்த காலத்தில் எம்பெருமானை அல்லது பாகவதரைச் சேர்த்து அநுபவிக்கப் பெறாமையால் தளர்ந்த ஆழ்வாரை அன்பர்கள் ஆற்றுவித்தலாம். முன்பு இருந்த அஜ்ஞாகமானது பக்திரூபமான செவ்விய ஞானத்தால் கழிந்ததென்பதும், உரிய காலத்தில் அநுபவிக்கபெறாமையாலே உள்ள விவேகமும் அழியும்படி மோஹாந்தகாரம் மேலிட்டதென்பதும் முதல் வாக்கியத்தால் தெரிவிக்கப்பட்டனவாம். (யாரேற்றின முலையாய்!) அடக்குவதற்கும் மறைப்பதற்கும் அரிதான பக்தியின் வளர்ச்சியையுடையவரே! என்று ஆழ்வாரை விளித்தபடி. (வருந்தேல உன் வளைத்திறம்) இப்படிப்படட் பக்தியையுடைய உமது அடிமைத்திறம் குலையுமென்று வருந்த வேண்டாவென்கை. மற்றது வெளிப்படை.
English Translation
O Coiffure-breasted tender one! Do not worry about your bangles. The black bull called darkness, who fell to the radiance of the red bull called sun, now limps back to fight again; it is only early evening. The lord accepted gift-sanctifying-water and took the whole earth. Will he not grace you as well?
