(2266)

(2266)

அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,

அமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அமுதன்ன

சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,

நன்மாலை யேத்தி நவின்று.

 

பதவுரை

அமுது என்றும்

அமிருதம் போன்றவனென்றும்

தேன் என்றும்

தேன் போன்றவனென்றும்

ஆழியான் என்றும்

திருவாழியை யுடையவனென்றும்

அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்

முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்

சொல்லப்பட்ட

சொல்லப்பட்டிருக்கின்ற

நல் மாலை

விலக்ஷணனான எம்பெருமானை

அமுது அன்ன சொல் மாலை

அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்

ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன்

பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ் எண்பத்துமூன்றாம் பாட்டில் “குறையாத வெஞ்சொற்கள் கூறினேன். என்று தாம் புன்மையான சொற்களைத் தொடுத்துக் கவிபாடினதற்கு அநுதபித்தார், ‘இப்படி அநுதாப்படுகிற நீர் வாய்மூடிக்கிடவாமல் மேன்மேலும் கவிபாடி கொண்டே யிருப்பானேன்?‘ என்று கேட்டவர்கட்கு உத்தரமாக ‘பகவத்விஷயம் பரமபோக்யமாயிருப்பதனாலே அதில் வாய் வைத்தே தீரவேண்டியிருக்கின்றது‘ என்பவர்போல பகவத்விஷயத்தின் பரமபோக்யதையைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார். அப்படி பரமபோக்யமான விஷயத்தைப்பற்றின பாடலாகையாலே என்னுடைய வெஞ்சொற்களும் அமுதன்ன சொல்மலைபாய் விட்டன என்கிறாரிப்பாட்டில்.

அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் அன்று அமுதுகொண்டுகந்தானென்றும் சொலப்பட்ட நன்மாலை அமுதன்ன சொன்மாலை (கொண்டு) ஏத்தியேத்தி நவின்று தொழுதேன் – என்று அந்வயிப்பது, சக்ரபாணி என்பதும் கடல்கடைந்தமுதங்கொண்டவனென்பதும் எம்பெருமானுக்கு எப்படி திருநாமங்களோ அப்படியே ‘அமுது‘ என்பதும் ‘தேன்‘ என்பதும் அவனுக்குத் திருநாமங்களாமென்க. “ரஸோ வைஸ“ என்றாள் வேதபுருஷன். “தேனைநன்பாலைக் கன்னலையமுதை“ “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திருமாலிருஞ் சோலைக் கோனேயாகி நின்றொழிந்தான்“ என்பர் ஆழ்வாரக்ள். இப்படி அமுதுந்தேனுமான எம்பெருமானைப் பாடுகின்ற பால்களும் அமுதமயமாகக் குறையில்லையென்பார் ‘அமுதன்ன சொன்மாலை‘ என்றார்.

“அமுது அன்று கொண்டு உகந்தான்“ – தன்னை வந்து அடிபணிந்தவர்கட்குக் காரியம் நிறைவேறினால் அவர்கள் மகிழ்வதிலுங்காட்டில் அதிகமாக மகிழ்வன் எம்பெருமான், ‘நம் ஆச்ரிதருடைய குறையைத்தீர்க்கப்பெற்றோமே!‘ என்று மகிழ்வனாம். அதுதோன்ற ‘உகந்தான்‘ எனப்பட்டது.

 

English Translation

Ambriosial Lord, extolled as the sweet nectar, the discus-wielder, the ocean-churner! With my sweet songs garland. I offer worship and praise.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top