(1122)

(1122)

கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை

நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,நீண்ட

மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற,

அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

 

பதவுரை

கலைகளும்

(வேதத்தின் உபநிஷத் பாகமான) வேதாந்தங்களையும்

வேதமும்

(கர்மகாண்டமான) வேதங்களையும்

நீதி நூலும்

இதிஹாஸங்களையும்

கற்பமும்

கல்பஸூத்ரங்களையும்

சொல்

வியாகரண சாஸ்த்ரத்தையும்

பொருள் தானும்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும்

நிலைகளும்

அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்

வானவர்க்கும்

தேவர்களுக்கும்

பிறர்க்கும்

மற்றுமுள்ள மனிசர்க்கும்

நீர்மையினால்

கிருபையினால்

அருள் செய்து

அளித்தவரும்

­­­­­­நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும தங்குகின்ற அலை கடல் போன்ற

பெரிய மலைகளும் சிறந்த கௌஸ்துபமணியும் பிராட்டியும் சங்கும்  எப்போதும் நிலைத்திருக் கப்பெற்ற அலையெறிகின்ற கடல் போன்றவருமான

இவர் ஆர்கொல் என்ன–;

அட்டபுயகரத்தேன் என்றார்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “கலைகள்” என்கிற சொல் பொதுவாக சாஸ்திரங்களை யெல்லாம் சொல்லுமாயினும், இவ்விடத்தில் பிரகரணபலத்தால் வேதாந்தபாகத்தைச் சொல்லுகிறது.  வேதம் என்ற சொல் – கர்மகாண்டமும் ப்ரஹ்மகாண்டமுமாகிய உபயபாகத்திற்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே கர்மகாண்டத்தளவிலே நிற்கிறது,  கலைகள் என்பதற்கு ப்ரஹ்மகாண்டத்தைப் பொருளாகக் கொண்டதனால்.

நீதிநூல்–இதிஹாஸங்களெல்லாம் நீதியையுணர்த்தும் நூல்களாம்.  கற்பம்–வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகளையுணர்த்தும் நூல் கல்பஸூத்ரமெனப்படும்.  சொல்–‘இது சுத்தமான சொல், இது அசுத்தமான சொல்’  என்று அறிவதற்கு உறுப்பான வியாகரண சாஸ்த்ரம்.  பொருள்–வேதங்களின் உண்மைப்பொருளை நன்கு விசாரித்து உணர்த்தும் நூலாகிய மீமாம்ஸை.  ஆகிய இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களை யெல்லாம் தானான தன்மையினாலும் முனிவர்களை அநுப்ரவேசித்த தன்மையினாலும் வெளியிட்டவன் எம்பெருமானேயாவன்.

மற்றநிலைகளும் ஸ்ரீ மேற்சொன்ன சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை முறை தவறாது அநுஷ்டிப்பவர்களுக்கு (அவரவர்களுடைய விருப்பத்திற்குத் தக்கபடி) ஒவ்வொரு ஸ்தானம் வருவதாகச் சொல்லப்பட்டுள்ளவற்றையும் எம்பெருமானே ஏற்படுத்தி வைத்தானென்கிறது.

(நீண்டமலைகளும் இத்யாதி.)  எம்பெருமான் கடல் போன்றிருப்பவனென்று பலரும் சொல்லுவதுண்டு;  ஆனால் நிறம் ஒத்திருப்பதைப்பற்றி அப்படி சொல்லுவர்கள்;  இங்குச்சொல்லு வதாவது–கடலிலுள்ள வஸ்துக்களெல்லாம் எம்பெருமானிடத்திலும் உள்ளமையால் கடலோடு உவமை சொல்லப்படுகிறது.  முன்னொரு காலத்தில் மலைகளெல்லாம் சிறகுடனே பறந்து நாடு நகரங்கட்குத் துன்பம் விளைத்துக்கொண்டிருக்கையில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின்  சிறகுகளைத் துணித்துக்கொண்டுவர, அப்போது மைநாகம் முதலிய பலமலைகள் கடலினுட்சென்று ஒளிந்துகொண்டு இன்றைக்கும் அவ்விடத்திலேயே தங்கிக் கிடக்கின்றன வென்று நூல்கள் கூறும்.  எம்பெருமானுடைய திருத்தோள்கள் மலைபோன்றிருத்தலால் கடலும் மலைகளை யுடையது, எம்பெருமானும் மலைகளையுடையவன்;  கடல் ரத்நாகரமாகையாலே மாமணிகளையுடையது;  எம்பெருமானும் “குரமாமணிப்பூண்” எனப்பட்ட ஸ்ரீகௌஸ்துபத்தையுடையவன்;  கடலைக்  கடைந்தபோது அதில் நின்றும் பிராட்டி அவதரித்

தனளென்று புராணவரலாறு உள்ளதனால், மலர்மங்கை தங்கப்பெற்றது கடல்;  எம்பெருமானும்- அகலகில்லேனிறையு  மென்றலர்மேல் மங்கையுறைமார்பன்.  சங்குக்கு உறைவிடம் கடல்;  எம்பெருமானும் இடங்கைச் சங்கமுடையான்;  ஆக இப்படிகளாலே கடலைப் போன்றுள்ளவன் எம்பெருமான் என்றதாயிற்று.

 

English Translation

The Vedas, the Vedanias, ltihasas, kalpasutras, Vyakarana, Mimamsa,, these and other sacred texts were given to the gods and men with grace, by the Lord who has mountain-like arms that bear the conch and discus, a gem radiant chest with lotus dome Lakshmi and the dark hue of the deep ocean. Seeing this form, who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top