(1053)

(1053)

துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,

தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,

கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,

அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே.

 

பதவுரை

என் நெஞ்சம் என்பாய்

ஓ மனமே!,

துவரி ஆடையர்

காஷாய வஸ்த்ரமுடுத்தவர்களாய்

மட்டையர்

மொட்டைத்தலையரா யிருக்கிற

சமண் தொண்டர்கள்

சமணமதக்காரர்கள்

மண்டி

ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து

உண்டு

(மனம்போன படி) உணவுகளை உட்கொண்டு

பின்னரும்

மேலும்

தாங்களும் தமரும் தடிக்க

அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் உடல் தடித்துக்கிடக்க,

(நீயும் அவர்களைப்போலே உண்டு தடிக்க நினையாமல்)

கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட

சவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கப்பெற்ற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும்

கண் ஆர் விசும்பிடை அமரர் நாயகற்கு

விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு

இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அரையிலே காஷாயத்தை உடுத்துக்கொண்டு மொட்டைத் தலையராகக் கிடக்கிற அமணர்கள் கண்டபடி மேல்விழுந்து சோறுகளைத் தின்று அவ்வளவோடு திருப்திபெறாமல், தங்களைப் போன்ற மற்றுமுள்ள அமணர்களுடனே பின்னையும் பெருங்கூட்டமாக இருந்து தின்று தின்று தடித்திருக்கக் காணாநின்றோம்; நெஞ்சமே நீயும் அவர்களைப்போலே உண்டியே உகந்து ஊன்மல்கி மோடுபருக்காதே திருவேங்கடமுடையானுக்குத் தொண்டுபூண்டு வாழப்பெற்றாயே! என்று உகந்தாராயிற்று.

துவரி-காஷாயம்.  மட்டையர்- தலைமயிர்களைப் பிடுங்கி யெறிவதையே தொழிலாகக் கொண்டவர்களாதலால் மொட்டைத் தலையராயிருப்பர் சமணர். தலையிலே மயிர் வளர்ந்தால் பூச்சிகளும் புழுக்களும் சேரநேர்ந்து ஜீவஹிம்ஸை ஏற்படுமென்று அவர்கள் க்ஷெளரமும் செய்துகொள்ளாமல் பிறரைக்கொண்டு தலை மயிரைப் பிடிங்கி யெறியச் சொல்லுவார்களாம்; பிடுங்கும்போது நொந்தாலும் நோகிறதென்று வாய்விட்டுச் சொல்லாதே “பரமஸூகம்! பரமஸூகம்!!” என்றே சொல்லிக்கொண்டிருக்கவேணுமாம்.  இப்படிப்பட்ட ஆசரணையுடையவர்கள் இக்காலத்தில் உளரோ இலரோ அறியோம். -“ஸ்திர சிரஸிஜோல்லுஞ்சநேநைவ தண்ட:” என்றார் வேதாந்த தேசிகனும் ஸங்கல்பஸூர்யோதய நாடகத்தில் இரண்டாம் அங்கத்திலே.

வேங்கடங் கோயில்கொண்ட என்பது அமரநாயகனுக்கு விசேஷணம்.

 

English Translation

O Heart! The head-shaven russet clothed Sramana-devotees fall one another and grab food, making themselves fat. Our Lord who is the Lord of heavenly gods resides in Venkatam hills where musk deer roam in herds around h9is temple. Today you too have entered into his service.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top