(1054)

(1054)

தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை

நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,

மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை

அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.

 

பதவுரை

தருக்கினால்

வெறும் தர்க்கங்களாலே

சமண் செய்து

தங்களுடைய சமண மதத்தைப்பற்றி வாது செய்துகொண்டு

தண் தயிரினால்

நல்ல தயிரோடு கூடிய

சோறு திரளை

சோற்றுக் கவளத்தை

மிடறு இடை

கழுத்துக்குள்ளே யிட்டு

நெருக்குவார்

அடைப்பவர்களான அந்தச் சமணருடைய

அலக்கண் அது

அப்படிப்பட்ட திண்டாட்டத்தை

கண்டு

பார்த்து

என் நெஞ்சம் என்பாய்

ஓ மனமே! (நீ அவர்களுடைய திரளில் சேராமல்)

வண்டுகள்

வண்டுகளானவை

மருட்கள்

மருள் முதலிய இசைகளை

பாடும்

பாடுமிடமான

வேங்கடம்

திருமலையை

கோயில் கொண்டு

திருக்கோயிலாகக் கொண்டு

அதனோடும்

அவ்வளவுமாத்திரமன்றிக்கே

வானிடை

ஆகாசத்திலே (திரிகிற)

அருக்கன்

ஸூர்யமண்டலத்திலும்

மேவி நிற்பாற்கு

பொருந்தியிருக்கும் பெருமானுக்கு

அடிமைத்தொழில் பூண்டாயே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தருக்காவது தர்க்கம்;  யுக்திவாதம்.  கேவலம் யுக்திவாதங்களாலே மதஸ்தாபநம் செய்வது கூடாது;  சாஸ்த்ரங்களுக்கு இணங்கிய யுக்திவாதங்களே உசிதமானவை; அங்ஙனன்றிக்கே பிரமாணங்களுக்கு விருத்தமான சுஷ்கதர்க்கங்களாலே தங்கள் மதத்தை உரைப்பராம் சமணர்கள்; அதை அருளிச் செய்கிறார் தருக்கினால் சமண் செய்து என்று.

(சோறு இத்யாதி.) சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதமுண்டு; அதாவது- பெருஞ்சோறுண்ணுதல்.  தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி மிடற்றிலேயிட்டு நெருக்குவர்களாம் நோன்புக்குறுப்பாக;  அப்போது படும் கஷ்டம் பொறுக்க முடியாததாம். இப்படி அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டுபூண்டு மகிழப்பெற்றாயே நெஞ்சமே! என்று உகக்கிறார்;.  “தெருவில் திரி சிறு நோன்பியர்செஞ்சோற்றோடு கஞ்சிமருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று மேல் ஏழாம்பத்திலே அருளிச்செய்யும் பாசுரமும் இங்குக் குறிக்கொள்ளத் தகும்.

(அலக்கண்-துன்பம்.)

வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு =  வைதிகர்கள் வணங்கும்படியாக ஸூர்ய மண்டலத்திலே எழுந்தருளி யிருப்பவனென்கை.  “த்யேயஸ் ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண:” என்று முப்போதும் அநுஸந்திக்கிறோமிறே

 

English Translation

O Heart! See the distress of the polemic Sramanas who gulp curd-rice down their throats! The Lord resides in Venkatam where bees sing the Marul love-songs around his temple: he is the soul of the sun in the sky. Today you too have entered into his service.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top