(605)

(605)

கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து

உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்

உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்

நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே

பதவுரை

கடலே கடலே!

ஓகடலே!
உன்னை

(தனக்குப் படுக்கையிட மாகவாய்ந்த) உன்னை
கடைந்து

(மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து

கலக்கி
உடலுள் புகுந்து நின்று

(உனது) சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு

ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று

என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற

என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு

எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம்

என்துக்கங்களையெல்லாம்
நாக அணைக்கே

அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று

நீபோய்
உரைத்தியே

சொல்லுவாயா? (சொல்லவேணும் என்கை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநந்தரம், கடலின் ஓதம் காதில்விழத் தொடங்கின்று, கடலே! என்று ஒருகால் அதனைநோக்கிச் சொன்னவளவிலும் அது தன் கோஷத்தையே பெருக்கக் கிளப்பிக் கொண்டிருக்க, அந்தக் கோஷத்தையே பெருக்கக் கிளப்பிக் கொண்டிருக்க, அந்தக் கோஷத்தைக் கீழ்ப்படுத்தித் தன்னுடைய த்வநியே ஓங்கும்படி கடலேகடலே! எனவிளித்து ஒருவார்த்தை சொல்லுகின்றாள்.

“மாலுங் கருங்கடலே! என்நோற்றாய்! வையகமுண்டாலினிலைத் துயின்ற வாழியான் கோலக் கருமேனிச் செங்கண்மாற் கண்படையுளென்றும், திருமேனி நீதீண்டப்பெற்று“ (முதல்திருவந்தாதி) என்றபடி எம்பெருமானுக்கும் கடலுக்கும் நெருங்கினஸம்பந்தம் இருக்கின்றமையால் அந்தஸம்பந்தத்தையே பற்றாசாகக்கொண்டு கடலைப் பிரார்த்திக்கின்றாள் – நான்படும் பாட்டை * அரவணை மேற்பள்ளிகொண்ட முகில்வண்ணன் பக்கலிலே நீதெரிவிக்க வேணுமென்கிறாள்.

தனக்கு உபகாரம் செய்யுமவர்களை வேண்டியமட்டும் ஹிம்ஸித்து அவர்களிடத்துள்ள ஸாரத்தையும் கொள்ளைகொள்பவன் எம்பெருமான் – என்னுமிடம் விளங்கக் கூறுவன முன்னடிகள். கடலானது நமக்குப் படுக்குமிடமாயிற்றேயென்று சிறிதும் நோக்காமல் மலைகளையெல்லாங் கொணர்ந்து உன்னுள்ளே போட்டு உன்குடல் குழம்பும்படி உன்னைக்கடைந்து கலக்கினதுமல்லாமல் உன்னோடே அன்புடன் அணைந்து கிடக்கிறாப் போற்கிடந்து உன்பக்கல் ஸாரமாயிருந்த அம்ருதத்தைக் கொள்ளை கொள்வித்தவனன்றோ அவன் என்கிறாள்.

“நீதான் என்செய்தாய்? தூசித்தலையிலே படையறுப்பாரைப்போலே உன்னையன்றோ நெருக்கிக்கடைந்து கலங்கப்பண்ணிற்று, படுக்கையென்றும் பாராதேயன்றோ நெருக்கிற்று; இடங்கொடுத்தார் நெஞ்சிலே கல்லையிட்டுநெருக்கிச் சாறுபெறுத்துமவரன்றோ“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி ஸேவிக்கத்தக்கது.

உன்னை இப்பாடுபடுத்தியதுபோலவே என்னையும்படுத்தா நின்றானெகிறாள் மூன்றாமடியில். மேலோடே அணைந்து உள்ளே பசையறுத்தபெருமான் என்கிறாள். மாயற்கு என்றது அவன் இப்பாடுபடுத்தச் செய்தேயும் “ஆகிலுங்கொடிய வென்னெஞ்சமவனென்றே கிடக்குமெல்லே!“ என்றபடி அவனையே பற்றி நிற்கும்படியான மாயமுடையவன் என்றபடி. நடலை- துக்கம். நாகணைக்கே சென்று உரைத்தி – சென்றால் குடையாமிருந்தால் சிங்காசனமாம்“ என்றபடி ஸர்வ்வித கைங்கரியங்களும் திருவனந்தாழ்வானொருவன் இடத்தில்தானோ கொள்ளவேணும், அத்தகைய கைங்கரியங்களுக்கு அடியோம் உரிமைப்பட்டோமல்லோமோ? என்று சொல்லவேணுமென்பது உள்ளுறை. அன்றியே திருவனந்தாழ்வானைப் புருஷகாரமாகக் கொண்டு சொல்லவேணுமென்பதாகவுமாம்.

English Translation

O Vast Ocean! Just as the wonder-Lord churned you and took the elixir-of-life from your deep, he entered into me and took my life. Will you not go and tell my woes to the serpent his companion?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top