(86)
தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்
உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க
தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.
பதவுரை
| சங்கிலிகை தொடர் |
– |
இரும்புச்சங்கிலியின் தொடர்பு |
| சலார்பிலார் என்ன |
– |
’சலார்பிலார்’ என்று சப்திக்கவும் |
| தூங்கு |
– |
தொங்குகின்றனவும் |
| பொன் |
– |
பொன்கயிற்றிற்கட்டியிருப்பனவுமான- |
| மணி |
– |
மணிகள் |
| ஒலிப்ப |
– |
ஒலிக்கவும் |
| படு |
– |
உண்டான |
| மும்மதம் புனல் |
– |
மூன்று வகையான மதநீர் |
| சோர |
– |
பெருகவும் |
| நின்று |
– |
இருந்துகொண்டு |
| வாரணம் |
– |
யானை |
| பைய |
– |
மெல்ல |
| ஊர்வது போல் |
– |
நடந்து போவது போல |
| கிண்கிணி |
– |
காற்சதங்கைகள் |
| உடன்கூடி |
– |
தம்மிலே தாம்கூட்டி |
| ஆரவாரிப்ப |
– |
சப்திக்கவும் |
| உடை |
– |
திருவரையில் கட்டிய |
| மணி |
– |
சிறு மணிகள் |
| பறைகறங்க |
– |
பறைபோல் சப்திக்கவும் |
| சார்ங்கம் |
– |
சார்ங்கமென்னும் வில்லை |
| பாணி |
– |
கையிலேந்திய பிள்ளையாகிய இவன் |
| தட தாள் இணை கொண்டு |
– |
(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால் |
| தளர் நடை |
– |
இளநடையை |
| நடவானோ |
– |
நடக்கமாட்டானோ? |
|
[நடக்கவேணும். ] |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கை கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நேருமாதலால் இதற்கு ஓர் ஏற்ற உபமாநம் கூறுகின்றார் முன்னடிகளில்; யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு நடக்கையாலே அந்தச் சங்கிலித் தொடர் சலார்பிலாரென்று சத்திக்கவும், பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும், மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் யானை ஏற்ற உவமையாம். சலார்பிலார்-ஒலிக்குறிப்பு. மூன்று+மதம்=மும்மதம்: “மூன்றனுறுப்பழிவும் வந்ததுமாகும்” என்னும் சூத்திரவிதி அறிக; கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூவிடங்களிலும் தோன்றும் மதம். வாரணம்- வடசொல். உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப-அரைச்சதங்கை (நழுவிவிழுந்து திருவடிகளிலேசேர்ந்து இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள்) தம்மிலெகூடிச் சப்திக்க என்றுமாம். இணைதாள்-தமக்குத்தாமே ஒப்பான திருவடிகள் என்றலுமொன்று. சார்ங்கபாணி-வடசொற்றொடர். தளர்நடை-(திருவடிகளை நன்றாகப் பதியவைத்து நடக்கும் பருவமன்றாகையாலே) தட்டித் தடுமாறி நடக்கும் நடை.
English Translation
Jaunting like a rutted elephant with the clangour of chains and the chime of hanging bells, ichor oozing in three spots, will no my Lord Sarangapani come toddling? His waist-bells peeling, his ankle-bells joining in the din, is he going to come toddling now?
