(80)

(80)

தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது

போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள

பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்குஅன்று

தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.

பதவுரை

தந்தை

(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது
சொல்

பேச்சை
தாரித்து கொள்ளாது

(மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல்
போர் உய்த்து வந்து

யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து
புகுந்தவர்

(போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும்
மண்

ராஜ்யத்தை
ஆள

(தாமே) அரசாளுவதற்கு
பாரித்த

முயற்சிசெய்த
மன்னர்

அரசர்களுமாகிய
நூற்றுவர்

நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள்
பட

மாண்டுபோகும்படி
அன்று

(பாரதயுத்தம் நிடந்த) அக்காலத்திலே
பஞ்சவர்க்கு

பஞ்சபாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக)
தேர் உய்த்த

(பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின
கைகளால்

திருக்கைகளாலே

சப்பாணி-;

தேவகி சிங்கமே

தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே!

சப்பாணி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – “தந்தை சொல்கொள்ளாது” என்றது – தந்தையாகிய உன்னுடைய சொல்லைக்கேளாமல் என்று பொருள்படுதலால் முன்னிலைப்படர்க்கை.  எல்லாவுலகத்துக்கும் தந்தையாகையாலே தங்களுக்கும் தந்தையாகிய நீ பாண்டவர் துரியாதநாதியர் என்ற இருவகுப்பினரையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதநாதியரிடம் தூதுசென்று  பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டா; ராஜ்யத்தில் இருவர்க்கும் பகுதியுண்டாகையால் ராஜ்யத்தை சமபாகமாகப் பிரித்து ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்; அதற்கு ஸம்மதமில்லையாயின் தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர்  ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்; ‘அதற்குமிஷ்டமில்லாதிருந்தால் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஓரூரையாவது கொடுங்கள்’ என்று பலபடியாக அருளிச்செய்ய அந்தச் சொல்லுக்குச் சிறிதும் இசையாமல் ‘பராக்ரமிருந்தால் போர்செய்து ஜயித்துக் கொள்ளட்டும் ; இந்தப்பூமி வீரர்க்கே உரியது’ என்று இப்படி அஹங்காரங்கொண்டு மறுத்துச் சொல்லி போர்செய்து  பாண்டவர்களையழித்துத் தாங்களே பூமண்டலத்தை எல்லாம் ஆளுவதாக நினைத்துத் துரியோதநாதியர் போர்க்களத்தில்  ஸேனையைத் திரட்டிக்கொண்டு  வர உன்னையல்லாது  வேறொன்றைத் துணையாகக் கொள்ளாத பாண்டவர்கள் வெற்றிபெற வேணுமென்று நினைத்த நீ ‘ஆயுதம் எடுக்கக்கூடாது’ என்று துரியோதனன் உன்னை வேண்டிக்கொண்டதனாலே அர்ஜுநஸாரதியாய் நின்று எதிரிகளடங்கலும் தேர்க்காலிலே நெரிந்து போம்படி தேரை நடத்தினாய்; அப்படி தேரை நடத்தின கைகளாலே சப்பாணி கொட்டவேணும் என்றாளாயிற்று.

தரித்து என்பது “தாரித்து” என நீட்டல் விகாரம் பெற்றுக்கிடக்கிறது.  நூற்றுவர் பஞ்சவர் – தொகைக்குறிப்பு.  உய்த்து – உய்க்க; எச்சத்திரிபு.

English Translation

These are the hands that drove the chariot for the five Pandavas against the ambitious hundred who sought to rule the Earth and waged a war, not heeding their father’s words.  Clap Chappani.  O, Lion-cub of Devaki, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top