(3923)
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான் உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே.
பதவுரை
|
செம் கனி வாய் |
– |
செங்கனி போன்ற அதரத்தையுடைய |
|
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை |
– |
ஆயர் மங்கைகள் அநுஸந்தித்த சொல் மாலையாய் |
|
எங்கள் ஆயர் தேவு |
– |
எங்களாயர் கொழுந்தாகிய |
|
அவனோடும் பிரிவதற்கு இரங்கி |
– |
அவனை விட்டுப் பிரிவதற்கு வருந்தி |
|
அத்திருவடி |
– |
அந்த ஸ்வாமியினுடைய |
|
அங்கு தையல் |
– |
அததிருவாய்ப் பாடியிலுள்ள ஒரு ஆய்ச்சி |
|
திரு அடி மேல் |
– |
திருவடிகளிலே, |
|
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன |
– |
அவன் பசு மேய்க்கப் போவதைத் தவிரிப்பதற்காகச் சொன்ன |
|
பொருநல் சங்கணி துறைவன் வண் தென் குரு கூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் |
– |
தமிரபர்ணியில் திருச்சங்கணி துறையை நிரூபகமாகவுடையரான திருக்குருகூராழ்வார் பணித்த ஆயிரம் பாடலினுள்ளும் |
|
இவையும் பத்து |
– |
இப்பதிகமும் |
|
அவற்றின் சார்வே |
– |
மற்றைப் பதிகங்களுக்குச் சொன்ன பலனைத் தரும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * * … ஆழ்வார் தாமருளிச் செய்த பதிகங்களுள் எம்பெருமானைப் பசுநிரை மேய்க்கப் போக வேண்டாவென்று நிஷேதித்த பாசுரமான இப்பதிகமும் மற்றைப் பதிகங்ளோடொக்க ஒரு பதிகமே! என்று தாமே விஸ்மிதராகிறார். அத்திருவடி திருவடி மேல்… முதலிலுள்ள திருவடியெயன்னும் சொல் :ஸ்வாமியென்னும் பொருளுடையது; அந்த ஸாவஸ்வாமியானவன் திருவடிகளிலே யென்றபடி.
தையல் என்றவிடத்து நம்பிள்ளையீடு:- “ஸபைபோலே எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படதென்று பார்த்து. அவருக்கு மறுக்குவொண்ணாதபடி நப்பின்னைப் பிராட்டியுடைய தரமுடையாளொருத்தி பசுமேய்க்கப் போகாமே மீட்கைகாகச் சொன்னவை யாய்த்து’. பல ஆய்ச்சிகளுக்கும் பிரதிநிதியாக ஒருத்தி சொன்ன சொல் என்க. சில பாசுரங்களில்* ஆழும் என்னாருயிர்* என்றும் * என் சொற்கொள்* என்றும் * எனதாவிவேமால்* என்றும் ஒருமையாகவுள்ளது; மற்றுஞ் சில பாசுரங்களில், * அடிச்சியோம்* என்றும்* தொழுத்தையோம் * என்றும் பன்மையாக வுள்ளது; ஒருத்தியே சொன்னதாகையாலே ஒருமை பொருந்தும்; பலர்க்குமாகச் சொன்னதாகையாலே பன்மையும் பொருந்தும்; * யாமுறாமை அடியேன் செய்யும் விண்ணப்பமே * என்ற திருவிருத்த முதற்பாசுரத்திலுள்ள ஒருமை பன்மைகள் இங்கு நினைக்கத் தக்கன.
இவையும் பத்து அவற்றின் சார்வே… மற்றைப் பதிகங்களினருகே இதுவுமொரு பதிகமே! என்று ஆச்சரியத்திலேயா’கி ஒரு நிர்வாஹம்; கீழ்ப்பதிகங்கட்குச் சொன்ன பலனே இதந்கும் பலன் என்பதாக இற்றொரு நிர்வாஹம்; முதலடியியல் திருவடிகளை ப்ரஸ்தாவிக்கையாலே, “ அவற்றின் சார்வே’’ என்று அத்திருவடிகளைச் சேவிக்கு மென்பதாக மற்றுமொரு நிர்வாஹம்; “ அவற்றின் என்பதனால் * மங்கையராய்ச்சியராய்ந்த மாலையைப் பராமர்சித்ததாகி பசுமேய்க்கப் போக வேண்டா வென்ற அவர்களது சொல்லைக் கேட்டு அவன் போக்குத் தவிர்த்து அவர்களுடனே கூடியேயிருந்தாப்போலே இது கற்றாரும் அவனோடு கூடியிருக்கையையே பலனாகப் பெறுவர் என்பதாக முடிவான நிர்வாஹம்.
English Translation
This decad of the thousand songs by Porunal’s kurugur Satakopan addresses the cowherd-Lord coral lips, spouse of Sri, with the words of a young Gopi pleading with him not to go grazing his cows. Those who can sing it will attain the benefit that she attained
