(3517)

(3517)

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்

கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,

திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.

பதவுரை

உண்ணும் சோறு

உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர்

குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்

தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே

(எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி

கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த
என் இள மான்

இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள்

பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன்

சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன்

அப்பெருமானுடைய
ஊர்

திவ்யதேசத்தை
வினவி

விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர்

சேர்ந்தவிடம்
திருக்கோளூரே

திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம்

இதில் ஸந்தேஹமில்லை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- படுக்கைத்தலையிலே மகளைக்காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது. ஆசர்யஹ்ருதயத்தில் ரிஷிகளிற்காட்டில் ஆழ்வார்க்கு நெடுவாசியருளிச் செய்யுமிடத்து “அவர்களுக்குக் காயோ டென்னுமிவையே தாரகாதிகள், இவர்க்கு எல்லாங் கண்ணனிறே“ என்றருளிச்செய்துள்ள சூர்ணை இங்கு அநுஸந்தேயம். ரிஷிகளானவர்களுக்கு * காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து * என்றும்* வீழ்கனியு மூழிலையு மென்னுமிவையே நுகர்நது * என்றும் சொல்லுகிறபடியே பலமூல பத்ரவாயு தோயங்களே தாரக போக்ஷக போக்யங்களா யிருக்கும், * க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் * என்னும்படியான இவ்வாழ்வார்க்கோ வென்னில் தாரகாதிகள் அவைய்ன்று * உண்ணுரு சோறு பருகும் சீர் தின்னும் வெற்றிலையுமான வெல்லாம் எம்பெருமானேயாம் என்கை.

“சோறும் நீரும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்“ என்றால் போதுமே, உண்ணுஞ்சோறு என்றும், பருகும் நீர் என்றும், தின்னும் வெற்றிலை யென்றும் அடைமொழி கொடுத்துப்பேசவேணுமோ? சோறாகில் அது உண்ணக்கடவதுதானே, நீராகில் அது பருகக் கடவது தானே வெற்றிலையாகில் அது தின்னக் கடவதுதானே, உண்ணும் பருகும் தின்னும் என்கிற இவ்வடை மொழிகள் வியர்த்தமேயன்றோ என்று நினைக்கவேண்டா. வயிறு நிறைய உண்டவனுக்குப் பரமான்னம் கிடைத்தாலும் அது உண்ணுஞ் சோறாகாது, கங்கைக் கரையிலே திரியும்வனுக்குக் கிணற்றுநீர் பருகுநீராகாது, அவ்வவற்றுக்கு அபேக்ஷை சில மையங்களிலும் அநபேக்ஷைக சில ஸமயங்களிலும் இருப்பது உலகவியல்பாதலால், பெரும் பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணுஞ் சோறு, பெருவிடாயனுக்குக் கிடைத்த நீர்தான் பருகுநீர் என்று கொள்ளவேணும். பெரும் பசியனுக்குச் சோற்றிலும் விடாய்த்தவனுக்கு நீரிலும் எப்படிப்ட்ட அபிநிவேசமோ எப்படிப்பட்ட அவிநிவேசம் ஆழ்வார்க்கு பகவத்விஷயத்தில் என்றதாயிற்று.

எல்லாம் கண்ணன் – * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப * என்று கீதாசார்யன் இழவோடே பேசினான் (அதாவது) எல்லாம் கண்ணன்“ என்றிருக்கிற மஹாத்மா கிடைப்பது மிகவும் அரிது என்கை. அவ்விழவுதீர வகுளாபரண மஹாத்மா வந்து தோன்றினாராயிற்று.

கண்ணனெம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்கள்மல்கி – எனக்கு ஸகலவிதமான தாரகபோஷக போக்யங்களும் கண்ணனெம்பெருமானே‘ என்று பலகால் சொல்லிக்கொண்டு நீர்மல்கு கண்ணினராயிருப்பதே ஆழ்வாருடைய இயல்பாம். இப்படிப்பட்ட பராங்குசநாயகிமான திருக்கோளூர் எங்கிருக்கிறது? எத்தனைதூரம் போரும்?“ என்று கேட்டுக்கொண்டே திருக்கோளூர்க்கே சென்று புகுந்திருப்பாள், வேறு எங்கும் போயிருக்க ப்ரஸக்தியில்லை, இது திண்ணம் என்கிறாள் திருத்தாயார்.

புகுமூர் என்றவிடத்து ஈட – “காட்டுத்தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப்புகுமாபோலே ஸம்ஸாரமாகிற பாலைநிலத்தில் காட்டுத்தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் “புகுமூர் என்கையாலே புக்கார் போகுமூர் அன்றென்கை.“

எம்பெருமானார் திவ்ய தேசயாத்திரையாக எழுந்தருளுகையில் திருக்கோளூர்க்கு எழுந்தருளாநின்றார், அப்போது அங்கு நின்றும் வெளியேறுகின்றாளொரு அம்மையாரைப் பார்த்து ‘எங்கு நின்றும் புறம்பட்டபடி? என்று கேட்க, அவள் ‘திருக்கோளூரில் நின்றும்‘ என்று சொல்லப் அதுகேட்டு எம்பெருமானார் “அவ்வூரில் புக்க பெண்களும் வெளியே போகக் கடவராயிருகப்பர்களோ?“ என்றாராம். புகுமூர் என்ற சந்தையின் சுவடையறிந்து அருளிச்செய்தபடி.

திருக்கோளூர் – பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று, திருக்குருகூர் முதலாய நவதிருப்பதிகளுள் ஒன்று. ஸ்ரீமதுர கவிகளின் திருவ்வதாரஸ்தலம் இதுவே.

English Translation

With tears in her eyes my tender fawn would say; “My food, drink and the Betel I chew, are all my Krishna”, I am sure she has found her way to Tirukkolur, enquiring about his town of fame and fortune on Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top