(3378)

(3378)

ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,

நீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,

காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,

பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே.

 

பதவுரை

அன்னையரும்

தாய்மாரும்

தோழியரும்

தோழிமாரும்

நீர் என்னே என்னாதே

‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல்

நீள் இரவும்

நீண்ட இராமுழுவதும்

துஞ்சவர்

உறங்காநிற்பர்கள்;

ஆல்

அந்தோ!;

கார் அன்ன

மேகத்தையொத்த

மேனி

திருமேனியையுடைய

நம் கண்ணனும்

நமது கண்ணபிரானும்

வாரான்

வந்து முகம்காட்டுகின்றிலன்;

வல்வினை யென் பின் நின்று

பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு

பேர்

என் பேர்

என்னை மாயாது

என்னை முடிய வொட்டுகிறதில்லை

என்னை ஆராய்வார் ஆர்

என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆரென்னையாராய்வார்.) துயருறுங்காலத்திலே உதவக்கடவரான அன்னையரும் தோழியாரும் ஆராயாதே கிடக்கின்றார்கள்; அவர்கள் உதவாதபோது வந்து உதவக் கடவனான கண்ணபிரானும் வருகின்றிலன்; இனி என் பெயரே மிக்கிருப்பது என்கிறாள்.

உலகத்தையெல்லாம் ஆராயப்பிறந்த ஆழ்வார் தமது திருவாக்காலே தம்மைப்பற்றி “ஆரென்னையாராய்வார்” என்னும்படியாவதே! இது ஒரு விலக்ஷணமான நோய்போலும்.

(அன்னையரும் தோழியரும் இத்யாதி.) இரண்டாமடியில் முதலிலுள்ள நீர் என்பது தலைவியின் வார்த்தையாக இருக்கத்தக்கது. (அதாவது) அன்னையரும் தோழியருமான நீங்கள் (என்னைப் பார்த்து) என்னே என்னாதே- என்ன செய்தி? என்று கூட விசாரிக்காமல், நீளிரவும் துஞ்சுவரால்-; ‘அஞ்சவா’ என்கிற வினைமுற்று படர்க்கையாகையால ‘நீர்’ என்ற முன்னிலைக்குப் பொருந்தாதேயென்று சங்கிக்கக்கூடும்; இதற்காக நம்பின்னை அருளிச் செய்கிறபடி- “துஞ்சுவரென்னுமிது துஞ்சுதிராலென்னுவர்த்தம் பெற்றுக் கிடிக்கிறது என்று சொல்லுவாருமுண்டு” என்று (வடமொழியில் *** என்று படர்க்கையாகச் சொன்னாலும் முன்னிலைப் பொருள் கொள்ளக் குறையில்லாதாப்போலே இங்கும் துஞ்சுவர் என்ற படர்க்கைக்கு, துஞ்சுதிர் என்று முன்னிலைப்பொருள் கொள்ளலாமென்பர் என்றவாறு.)

இங்ஙனன்றிக்கே மற்றொரு நிர்வாஹமும் அருவிச் செய்கிறார்-; ‘துஞ்சுவர்’ என்பதற்குப் படர்க்கைப் பொருளை கொள்ளலாம்; அப்போது ‘நீர்’ என்பதற்கு நீங்களென்று பொருளன்று; நீர்மையென்று பொருள்; நீர் என்னே என்னாதே = இது என்ன ஸ்வபாவம்: என்று ஈடுபட்டுப் பேசாமல் என்றபடி. இவ்விடத்து  ஈட்டில் “நிறை நிர நீரவர்கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு” என்ற குறள் எடுத்தாளப்பட்டுள்ளது. நீர் என்னுஞ் சொல்லுக்கு ஸ்வபாவமென்கிற பொருளுண்மையை மூதலிப்பதற்காக அது காட்டப்பட்டதென்று கொள்க. அக்குறளின் பொருளாவது- நீரவர்- நல்ல ஸ்வபாவமுடையவர்களினது, கேண்மை- நட்பானது, பிறை- சுக்லபக்ஷத்துச் சந்திரகனைப்போல, நிறைநீர- நாடோறும் நிறைந்து வளர்ந்து செல்லும் தன்மைத்து; பேதையார் நட்பு- மூடர்களது நேசமானது, மதி- கிருஷ்ணபக்ஷத்துச் சந்திரகலைபோல, பின்னீர- பின்னே நாடோறுங் குறையுந்தன்மைத்து, என்றபடி.

(காரன்ன மேனி இத்யாதி.) ஒரு சாவி நிலத்திலே ஒரு சுழி மழைபெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனாய்ய பெண்களுக்கே உதவிப்போந்தவனான கண்ணபிரானும் வருகின்றிலன்.

வல்லினையேன் பின்னின்று பேர் என்னை மாயாது- இது பரமபோக்யமான வார்த்தை; நான் முடிந்தாலும் என் பேர் முடிகிறதில்லையென்கிறாராழ்வார். அவருடைய திருமேனி என்றைக்கோ போனாலும் பல்லுழி யூழிதொறும் போகாதே நிற்பதன்றோ திருநாமம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸத்தா ஹேதுவானாப்போலே இவர் தமக்கும் ஸத்தா ஹேதுவானபடி. அடியுடைய பேராகையாலே ஸர்வர்ச்ரும் தாரகமாயிருக்குமே. இதினுடைய அடியுடைமையிறே எல்லாரும் சிரஸாவஹிக்கிறது.”

வல்வினையேனான என்னுடைய பேரானது நாண் மாய்ந்துபோனாலும் எனக்குப் பின்னேயும் நின்று கொண்டு என்னை மாய்ந்தேனாக வொட்டுகிறதில்லை என்றபடி. என் பெயரே மிச்சமாம்படி நான் முடிந்து போகா நின்றேனென்கை பரமதாற்பரியம். “வல்வினையென் பின்னிற்று” என்பதை “ஆரென்னையாராய்வார்” என்றதோடேகூட்டி, எனக்குத் துணைநின்று என்னை ஆராய்வாரார் என்பதாகவும் உரைக்கலாமென்பர் பன்னீராயிரவுரைகாரர்.

 

English Translation

Who inquires of me? My Mother and my sakhis sleep through the night, never asking what happened, My dark-hued Krishna too does not come.  Wicked me, my name will tell tales and not let me die!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top