(3221)

(3221)

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண்,

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்,

கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான்,

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே.

 

பதவுரை

குறைவு இல்  தட கடல்

குறையற்ற (பரிபூர்ணமான) விசாலமான திருப்பாற் கடலிலே

கோள் அரவு ஏறி

மிடுக்கனான திருவனந்தாழ்வான் மீது ஏறி

தன்

தன்னுடைய

கோலம்

அழகிய

செம் தாமரை கண்

செந்தாமரை போன்ற திருக்கண்கள்

உறைபவன் போல

துயிலப் பெற்றவன் போல

ஓர் யோகு புணர்ந்த

யோக நித்திரை செய்தருள்கின்ற

ஒளி மணி வண்ணன்

அழகிய நீலமணி போன்ற நிறத்தனும்

கண்ணன்

கண்ணனாய்த் திருவவதரித்தவனும்

கறை அணி மூக்கு உடை

கறையை அணிந்த மூக்குடையவனான

புள்ளை

பக்ஷி ராஜனை

கடாவி

நடத்தி

அசுரரை காய்ந்த

அசுரர்களை முடித்தவனுமான

அம்மான்

எம்பெருமானுடைய

நிறை புகழ்

நிறைந்த புகழை

யான்

நான்

ஏத்தியும்

துதித்தும்

பாடியும்

இசையில் அமைத்துப் பாடியும்

ஆடியும்

கூத்தாடியும்

ஒரு முட்டு இலன்

(எம்பெருமானை யநுபவிப்பதில் ) ஒரு தடையுமுடையேனல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இந்நிலத்தில் வந்து திருவவதாரம் பண்ணுதற்கு அடியாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிப் பிறகு வஸுதேவர் திருமகனாய் வந்து பிறந்தருளி ஆச்ரித விரோதிகளைத் தொலைந்தருளின கண்ணபிரானுடைய கீர்த்தியைப் பலபடியும் அநுபவிக்கப்பெற்ற நான் மேன்மேலும் இங்ஙனம் அநுபவிப்பதில் யாதொருதடையுமுடையேனல்லேனென்கிறார்.

குறைவில் தடங்கடல் = கீழே தமக்குக்கூறிய குறைவில்லாமையை இங்குத் தடங்கடலுக்குங் கூறுகின்றார், தடங்கலும் நானுமே குறைவில்லாதவர்கள் என்று கருத்துப் போலுமாழ்வார்க்கு. “மாலுங் கருங்கடலே! என்னோற்றாய், வையகமுண்டாலினிலைத் துயின்றவாழியான், கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப்பெற்று” என்ற பொய்கையார் பாசுரத்தின்படியே கடலின் குறைவில்லாமை காண்க. “தன்தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி – கிடந்தான்” என்கிறபடியே எம்பெருமான் தனது திவ்யாவயவங்களை ஸங்கோசமறப் பரப்பிக்கொண்டு கண்வளர்ந்தருளுகைக்குப் பர்பாப்தமான இடமுடையகடல் என்பார் ‘தடங்கடல்’ என்கிறார். அப்படிப்பட்ட கடலிலே, மிடுக்குடைய திருவனந்தாழ்வான்மீது திருக்கண்வளர்பவன்போல உலகங்களை ரக்ஷித்தருளும் படியைச் சிந்தைசெய்து கொண்டிருக்கின்றானாயிற்று.

ஓர் யோகுபுணர்ந்த வொளிமணி வண்ணன் கண்ணன்” என்ற சொற்சேர்த்தியழகை நோக்கி ஈட்டில் நம்பிள்ளையருளிச்செய்த ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை காண்மின்;- “ஸகலப்ராணிகளும் நம்மைக்கிட்டி கரைமரஞ் சேர்ந்ததாம் விரகு ஏதொவென்று இவற்றினுடைய ரக்ஷணோபாய சிந்தை பண்ணினால் அவ்வநுஸந்தானம் பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது கற்பூரநிகரம் வாயிலேயிடுவாரைப்போலே * ஆத்மாநம் வாஸுதேவாக்யம் சிந்தயந் *  என்று தன்னைத் தானே அநுஸந்தியா நிற்கும்; இப்படி அநுஸந்தித்தவாளே ரக்ஷணோபாயம் தோற்றுமே (ஒளிமணி வண்ணன் கண்ணன்) ரக்ஷயவர்க்கத்தைத் தன்வடிவழகாலே கரைமரஞ் சேர்க்கைக்காக க்ருஷ்ணனாய் வந்தவதரித்தவன்” என்ப ஈட்டு ஸ்ரீஸூக்திகள். உலகத்தை ரக்ஷிக்கச் சிந்தனை செய்தவளவில். ‘அழகிய வுருவத்துடனே உலகிற் சென்று அவதரித்து சேதனர்களை ஈடுபடுத்துவதே நலம்’ என்று தேறிஅப்படியே கண்ணானாக வந்து பிறந்தானென்றவாறு.

இந்நிலத்தில் அவதரித்து ஆச்ரிதவிரோதிகளைத் தொலைத்தபடி சொல்லுகிறது மூன்றாமடி. பெரிய திருவடியின்மீது ஏறிச் சென்று பகைவரைப்பற்றின வரலாறுகள் பலவுண்டு.“பொருந்தாவரக்கர் வெஞ்சமத்துப் பொன்றவன்று புள்ளூர்ந்து, பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்தவரக்கர் தென்னிலங்கை, இருந்தார் தம்மையுடன் கொண்டு அங்கெழிலார் பிலத்துப் புக்கொளிப்பக், கருந்தாள் சிலைகைக்கொண்டான்” (பெரிய திருமொழி 8-6-2) என்பது முதலிய பாசுரங்கள் காண்க.

கருடன் தனது மூக்கினாலேயே பகைவரைக் குத்திக் கொன்று, அதனால் மூக்கிலே கறையேறிக்கிடக்கும்:  அக்கடிற கழுவ அவஸரமில்லாமல் அதுவே ஆபரணமாயிருக்குமாம் மூக்குக்கு; ஆனதுபற்றியே “கறையணி மூக்குடைப்புள்” என்றார். மற்றொருவகையாகவும் கூறுவதுண்டு; கருடன் முட்டையாயிருக்கும் பருவத்திலே புத்திரனடைய முகத்தைக்காண வேணுமென்கிற விரைவினால் தாய் குத்திப்பார்க்கையில் அப்போது மூக்கிலேபட்டு ஓரடையாளம் பிறந்து அது எம்பெருமானுக்கு ஸ்ரீ வத்ஸம் போலே மறுவாக ஆயிற்றென்றும், அது தோன்றவே ‘கறையணி’ மூக்குடைப்புள்’ என்றது என்றும் அருளிச்செய்வர்.

இப்படியாக எம்பெருமான் அடியாரை ரக்ஷித்துப்படைத்த பெரும் புகழ்களைத் துதித்தும் இசையிலே வைத்தும்பாடியும் ஆடியும் திரிகிற நான் இடைவிடாத பகவதநுபவத்தையுடையேன் என்றாராயிற்று.

 

English Translation

The Lord of radiant gem hue, my Krishna, performs yoga on a serpent bed in the deep ocean with half-closed lotus eyes, Riding the red-beaked Garuda, he came and destroyed many toes.  Singing and dancing his praise, I am treed from want.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top