(2991)
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,
செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,
நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,
ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே.
பதவுரை
|
ஒக்கலை வைத்து |
– |
இடுப்பிலெடுத்துக் கொண்டு |
|
முலைப்பால் உண் என்று |
– |
‘முலைப்பாலையுண்பாய்’ என்று சொல்லி |
|
தந்திட |
– |
முலைகொடுக்க |
|
வாங்கி |
– |
(அம்முலையைக்) கையாற்பிடித்து |
|
செக்கம் |
– |
(அந்தப் பூதனையின்) நினைவு |
|
செக |
– |
அவளோடே முடியும்படியாக |
|
அன்று |
– |
அந்நாளில் |
|
அவள்பால் |
– |
அவளது பாலையும் |
|
உயிர் |
– |
பிராணனையும் |
|
செக |
– |
அழிய |
|
உண்ட |
– |
அமுதுசெய்த |
|
பெருமான் |
– |
ஸ்வாமியானதும், |
|
தக்கபிரானோடு |
– |
சிகம்பரச்சாமியான ருத்ரனும் |
|
அயனும் |
– |
பிரமனும் |
|
இந்திரனும் |
– |
இந்திரனும் |
|
முதலாக |
– |
முதலாகவுள்ள |
|
ஒக்கவும் |
– |
எல்லாரையும் |
|
தோற்றிய |
– |
படைத்த |
|
ஈசன் |
– |
ஈசனானவனும் |
|
மாயன் |
– |
ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம் பெருமான் |
|
என் நெஞ்சில் உளான் |
– |
எனது இதயத்திலுள்ளானானான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்கும் ஜநகனான எம்பெருமான் என்று நெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார். ஸ்ரீக்ருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக் குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக்கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்ற வரலாறு அறிக. (ஒக்கலைவைத்து இத்யாதி.) “மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய் கொங்கை, அதனாரவுண்பனென்றுண்டு, மகனைத் தாய் தேறாதவண்ணந்திருத்தினாய்” என்னும்படியே பூதனை யென்னுமரக்கி கண்ணனை யிடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு முலையுண்ணக் கொடுத்தாளென்க.
செக்கஞ் செக என்பதற்குப் பலபடியாகப் பொருள் கூறுவர்; செக்கம் என்று மரணத்திற்குப் பேராய், கண்ணனுக்காக அவள் எண்ணின் மரணம் அவளுக்கேயாம் படி என்னுதல், செக்கஞ் செக = மிகவுஞ் சிவப்பாக என்றபடியாய், “கறுப்புஞ் சிவப்பு * வெகுளிப்பெயரே” என்ற தமிழர்களின் ஸித்தாந்தத்தின்படி சீற்றத்தைச் சொல்லிற்றாய், மிகவுங் கோபங்கொண்டு என்றபடியுமாம். திருப்பவளம் மிகச் சிவக்கும்படி (அதரத்தின் பழுப்பு நன்கு தெரியும்படி) சிரித்துக்கொண்டே என்றபடியுமாம்.
அவள்பால் = பால் என்பதை ஏழனுருபாகவுங் கொள்ளலாம். அவளிடத்துள்ள என்றபடி.
(நக்த:) என்ற வடசொல் நக்கன் எனத் திரியும்; அரையில் ஆடையில்லாதவன் என்றபடி. இது சிவபிரானுக்கு வழங்கும் நாமம். அயன்- அஜன்:
அகாரவாச்யனான எம்பெருமானிடத்துத் தோன்றினவன் என்ற காரணத்தினால் பிரமனுக்குப் பெயர்.
இப்பாட்டில் நெஞ்சு என்ற மார்வைச் சொன்னபடி.
English Translation
The wondrous Lord instantly by his will created Siva, Indra, Brahma and all other gods and all the world. He is my darling child Krishna who took such from Putana’s poison breast. My Lord has-now risen to my bosom.
