(2627)

(2627)

அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,

நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்

மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,

மனத்துயரை மாய்க்கும் வகை.

 

பதவுரை

அவயம் என நினைத்து வந்த

அபயம் வேண்டிவந்து சரணமடைந்த

சுரர் பால்

தேவதைகளிடத்திலுள்ள

நவையை

குற்றங்குறைகளை

நளிர்விப்பான் தன்னை

போக்கடிக்கு மெம்பிரானை

சுவை இல் மனத்து

ஒரு படிப்பட்ட மனத்திலே

உயர வைத்து இருந்து

பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து

வாழ்த்தா தார்க்கு

மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு

மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?

தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அவயமென நினைத்து) ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும் ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி மற்றையோர்க்குத் துன்பங்கள் நீங்க வழியில்லை யென்கிறார். ஸ்மாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடிபணிந்து உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

சுரர்பாலே என்றவிடத்து ஸுரா: என்ற வடசொல் சுரர் எனத் திரிந்துகிடக்கிறது. தேவதைகள் என்று பொருள். இங்கே, பிரமன் சிவன் முதலிய ப்ரதாநதேவதைகளை நினைக்கிறது. வேதங்களை மதுகைடவர் முதலான அசுரர் கையிலலே பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டேவந்து சரணம்புகுந்து நின்ற பிரமனென்ன, ப்ரஹ்மஹத்தி சாபத்தால் கண்டபிடமெங்குந் திரிந்து எங்கும் புகலற்று வந்துநின்ற பரமசிவனென்ன, மாவலிபோல்வார் கையிலே தகர்ப்புண்டு பரிபவப்பட்டு வந்துநின்ற இந்திரனென்ன இவர்கட்கும் மற்றும்பல தெய்வங்கட்கும் துன்பறந் தவிர்த்தபிரான் ஸ்ரீமந்நாராயணனேயிறே.

அவயமென நினைந்துவந்த = “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே- அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று கடற்கரையிலே ஸ்ரீவிபீஷணாழ்வாரை நோக்கி அப்யமளித்ததை நெஞ்சிலே கொண்டு “அஞ்சேலென்ற கைகவியாய்” என்றும்“அடைக்கலம் புகுந்தவென்னை அஞ்சலென்ன வேண்டுமே” என்றும் அபயப்ரதானம் வேண்டிவருகின்றனராம் தேவர்கள். அப்படிப்பட்டவர்கள் திறத்திலே திருவருள்செய்து அவர்களுடைய நவையை நளிர்விப்பவன் எம்பெருமான்; நவையாவது குற்றம்; துக்கமுமாம். நளிர்வித்தலாவது நடுங்கச்செய்தல்; பகைவரை நடுங்கச் செய்கிறானென்றால் பகைவரை ஒழிக்கிறானென்று கருத்தாகுமிறே.

அபயம் என்ற வடசொல் அவயமெனத் திரிந்தது. அந்தாதித் தொடைக்க நன்கு சேரும்படியாக அவையம் எனப் பாடமென்பாருமுண்டு; அப்போது இடைப்போலி.

இப்படி ஸர்வரக்ஷகனான எம்பெருமானைக் கவை இல் மனத்து உயரவைத்திருந்து வாழ்த்தாதார்க்கு மனத்துயரை மாய்க்கும்பகை உண்டோ? = கவை என்று இரண்டுபட்டிருக்கைக்குப் பெயர்; கவையில்லாமையாவது ஒருபடிப்பட்டிருக்கை; “அநந்யாச் சிந்தயந்தோ மாம்” என்று கீதையில் சொல்லுகிற நிலைமை வாய்ந்திருக்கை. எம்பெருமானையே உபாயமாகவும் உயோகமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி. பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன்பங்களை நீக்கிக்கொள்ள வழியில்லை யென்தாயிற்று.

திருவாய்மொழியில் (9-8-3) “எவை கொலணுகப் பெறுநாள்” என்ற பாட்டில், நவை, கவை என்ற பதப்பிரயோகம் காண்க.

 

English Translation

The lord ends the despairs of gods who come to him seeking refuge.  For those who do not hold him firmly in their hearts and offer worship, is there any way to free themselves of their minds’ agonies?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top