(2624)
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.
பதவுரை
|
வா நெஞ்சே |
– |
வாராய் மனமே! |
|
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை |
– |
இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண; |
|
வெம் நரகில் |
– |
(நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே |
|
பூவியேல் |
– |
கொண்டு தள்ளி விடாதே; |
|
தீ பால |
– |
தீயதான தன்மையையுடையலான |
|
பேய் தாய் |
– |
தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய |
|
உயிர் |
– |
பிராணனை |
|
பால் |
– |
அவளது முலைப்பாலோடே |
|
நலாய் |
– |
கலந்து |
|
உண்டு |
– |
அமுது செய்து |
|
அவன் உயிரை மாய்த்தானை |
– |
அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை |
|
வாழ்த்தே |
– |
வாழ்த்துதலே |
|
வலி |
– |
நமக்கு மிடுக்காம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வாய்ப்பொலிதுவொப்ப.) எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின் மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில். நெஞ்சே! இப்படிப்பட்டதொரு வாய்ப்பு நமக்கு வேறொன்றில்லை; இவ்வுலகத்திலுள்ளாரெல்லாரும் தங்கள் தங்கள் வாயவந்தபடி கண்ட விஷயங்களையும் பாடிக்கொண்டு திரிபவர்களாயிருக்க, நாம் மாத்திரம் அப்படியிராமே பகவானுடைய புகழ்களைப் பேசும்படியானவிது இவ்விருள் தருமாஞாலத்தில் ஸம்பவிக்கக் கூடியதோ? அல்ல; ஆயினும் “விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்ணீர்” என்னுமாபொலே தெய்வயோகத்தாலே நமக்கு இப்பெரும்பாக்கியம் வாய்த்தது. ஆனால் பகவத் குணங்களின் தூய்மையையும் நமது நாவின் எச்சில் தன்மையையும் நோக்கும்போது ‘வாக்குத் தூய்மையிலாயினாலே மாதவா வுன்னை வாய்க்கொள்ளமாட்டேன்” (பெரியாழ்வார் திருமொழி 5-1-1) என்றாற்போலே இறாய்த்து நிற்கத் தோன்றுவதுண்டு; அப்படி நைச்சியம் பாவித்து பகவத் குணங்களைப் பேசாதிருப்பதானது சாஸ்த்ரங்களில் ப்ரஸித்தமான நரகங்களிற் காட்டில் மிகக் கொடிய நரகமேயாம் என்று கருதவேண்டும். அப்படிப்பட்ட நரகத்தில் என்னை நீ தள்ளப்பாராமல் அவனுடைய சரிதைகளில் ஏதேனுமொன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்கப்பார்; கஞ்சனாலேவப் பட்டுக் கண்ணபிரானைக் கொல்லக்கருதி முலையில் விஷந்தடவிக் கொண்டு பேய்வேஷத்தை மறைத்துத் தாய் வேஷத்தோடு வந்து முலைகொடுத்த பூதனையைப் பாலுண்கிற பாவனையிலே முடித்த சரிதையைச் சொல்லிப் புகழப்பார்; அவளுயிரை முடித்தாற்போலே நமது நைச்சியத்தையும் முடிக்க வல்லவன் அப்பெருமான் என்று கொண்டு அவ்வரலாற்றைச்சொல்லி ஏத்தப் பார் என்று தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறபடி.
வாய்ப்பு = ஸித்தி, சிறப்பு,தகுதி, நயம், பேறு, வளமை. போய்ப்போய் வெந்நரகில் பூவியேல் = “திருமாற்கு யாமார் வணக்காமர் ஏபாவம் நன்னெஞ்சே! நரமாமிகவுடையோம் நாழ்” (இப்பிரபந்தத்தில் பத்தாம் பாட்டு) என்று அடிக்கடி நைச்சியம் பாவித்துப் பின்வாங்குவது வழக்கமாகையால் இனி அப்படி வேண்டாமென்கிறார். வெந்நாகு = ** யஸ் த்வய ஸஹ ஸ்வாக்கோ நிரயோ யஸ் திவ்யா விநா” என்று எம்பெருமானோடு கூடியிருப்பது சுவர்க்கம். அவனைப் பிரிந்திருப்பது நரகம் என்று இளையபெருமாள் (ஸ்ரீராமாயணத்தில்) கூறினது இங்கு உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கது. எம்பெருமானை ஏத்துகை சுவர்க்கம்; ஏத்தாதிருக்கை நரகம் என்கைக்கும் உபலக்ஷணம். “நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க. நரகமே சுவர்க்கமாகும் நாமக்ங்களுடைய நம்பி” என்ற திருமாலைப் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
வெண்டளை பிறழாமைக்காக இரண்டாமடியின் முதற்சீர் தேமாங்காய்ச் சீராக அமையவேண்டுதல் பற்றிப் “போய்ப் போ ஓய்” என்றருளிச் செய்யப்பட்டது. “போய்ப்பேய்” என்னில் தேமாச் சீராய் தளை தட்டுமே. “காய்முன் நேரும் மாமுண் திரையும் விளமுண்நேரும் வருவது வெண்டளை.”
பூவியேல் = ‘புகுவியேல்’ என்ற எதிர்மறை வினைமுற்று மருவியிருக்கின்ற தென்னலாம். உயிர் கலாய் பாலுண்டு = உயிரைப் பாலோடே கலந்து உண்கையாவது பாலுண்கிற பாவனையிலே உயிரைமுடிப்பதாம். கலாய்-கலந்து. “களாய்” என்பர் அத்பாபகர். அவளுயிரை மாயத்தவனான எம்பெருமானை வாழ்த்துவதே நமக்கு மிடுக்கு என்றாவது, மாய்த்தவனை வாழ்த்துகையிலே துணிவுகொள் என்றாவது; மாய்த்தவனை வலிதாக (நன்றாக) வாழ்த்து என்றாவது உரைக்கலாம்.
English Translation
Come, O heart! There is no better opportunity, than this. Do not case me into hell again and again, Better praise the Lord who sucked the ogress breast and her life with it.
