(2623)
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
பதவுரை
|
நெஞ்சமே |
– |
ஓ மனமே! |
|
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை |
– |
தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து |
|
அழைத்து |
– |
கூப்பிட்டு |
|
ஒருகால் |
– |
அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே |
|
போய் |
– |
பரமபதத்திலே சென்று |
|
பொலிய |
– |
நன்றாக |
|
உபகாரம் |
– |
கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை |
|
கொள்ளாது |
– |
கொள்ள முயலாமல் |
|
அவன் புகழே |
– |
அப்பெருமானது திருக்குணங்களையே |
|
வாய் உபகாரம் கொண்ட |
– |
வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற |
|
வாய்ப்பு |
– |
இந்த நேர்பாடு |
|
பிழைக்க முயன்றோமோ |
– |
தப்பு செய்ததாமோ? |
|
பேசாய் |
– |
நீ சொல்வாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பிழைக்க முயன்றோமோ) “ஈன்துழாய்மாயனையே ஏசியேயாயினும் பேசியே போக்காய் பிழை” என்று பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார். “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித்தொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று அங்கே நித்ய கைங்கரியம் பண்ணவேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்துகொண்டு அவனது திருக்குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறாரிப்பாட்டில்
தழைக்குந்துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாயுபகாரங்கொண்ட வாய்ப்பு, நெஞ்சமே பிழைக்கமுயன்றோமோ பேசாய என்று அந்வயிப்பது. ஒரு வாடல்மாலையை இட்டாலும் அது தன்னிலத்திற் காட்டிலும் அதிகமாகத் தழைத்து விளங்குதற்கிடமான திருமார்விலே அம்மாலையை அணிந்துள்ள ஸர்வேச்வரனை நோக்கிக் “கூவிக்கொள்ளுங் கால மின்னங்குறுகாதோ?” என்றாற்போலே கதறியழைத்தால் ஒருகால் அவன் நம்மைப் பரமபதத்திலே சேர்த்துக்கொண்டு ஸகலவித கைங்கரிய ஸாம்ராஜ்யங்களைக் கொடுத்தருள்வன; ஆகையாலே அப்படி கதறி அக்கைங்கரியங்களைக் கொள்ளப்பாராமல் இங்கிருந்துகொண்டு அவனது திருப்புகழ்களையே வாய்வெருவிக்கொண்டிருப்பதும் ஒரு வாய்ப்பான விஷயமேயாகிலும் ஓ நெஞ்சே! இது தப்போ சரியா? எனக்குத் தெரியவில்லை. நீ சொல்லாய் என்கிறார்.
பரமபதத்திற் சென்றாலும் குணாநுபவமே யாத்திரையாகையாலே அதனை இங்கிருந்து செய்தாலென்ன? அங்கிருந்து செய்தாலென்ன? என்று தோன்றும்போது இங்கிருந்து செய்யுமிக்குணாநுபவம் அயுக்தமல்ல என்று தோற்றும். இந்நிலத்தில் குணாநுபவம் நடந்தாலும் இது இருள்தருமாஞால மாகையாலே “ஆற்றங் கரைவாழ் மரம்போ லஞ்சுகின்றேன்” “பாம்போடொரு கூரையிலே பயின்றற்போல் தாங்காதுள்ளம் தள்ளும்” என்று ஞானிகள் அஞ்சவேண்டிய நிலமாயிருப்பதால் இங்கிருந்து குணாநுபவம் செய்வதில் விருப்பமற்று இங்கே அடிக்கொதித்து அங்கே போய்ச் சேரவேணுமென்று விரைவு உண்டாம்போது இங்கிருந்து செய்யுமிக்குணாநுபவம் யுக்தமல்ல என்று தோற்றும். ஆக இரண்டு வகையாகவுந்தோற்ற இடமுண்டாகையாலே ஆழ்வார் தம்முடைய நிஷ்கர்ஷத்தைத் துணிந்து சொல்லமாட்டாமல் “பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே!” என்கிறார்; பிழைக்க என்றது- பிழைசெய்ய என்றபடி. ‘நாம் தப்பாகச் செய்கிறோமோ’ என்று சொல்லுகிற ஸ்வரவகையில் ‘இது தப்பு அல்ல, என்றும் ‘இது தப்பவு ஆகலாம்’ என்றும் தோற்றுமாறிருக்கும்.
“ஜ்ஞாகம் பிறந்தபின்பு அடிமைக்கு அநுகூலமல்லாத ஸம்ஸாரஸம்பந்தம் விட்டு நீங்குவது எப்போதோவென்று இந்நிலமடிக்கொதித்து அடிமைக்கு அநுகூலமான பரமபதத்திலே போய்ப் பரிபூர்ணமாக அநுபவித்து அடிமை செய்து வாழ்வோமென்று அங்கே போகப் பாரியாமல் இங்கே குணாநுபவ மாத்ரத்திலே த்ருப்தி பிறந்திருக்கையாவது பகவத் விஷயத்தில் கண்ணழிவற்ற ருசியில்லாமையிறே என்று தாத்பர்யம்” என்று முன்னோரை வாக்கியம் நோக்கத்தக்கது.
ஒருகால் போய் = நாம் எவ்வளவு கதறினாலும் எம்பெருமான் திருவுள்ளமிரங்கின காலத்திலன்றிப் பரமபதம் செல்ல முடியாதாகையாலே அவனுக்குத் திருவுள்ளாமனதொரு காலத்திலே அங்குச் சென்று என்றபடி.
English Translation
O Heart! Calling the Tulasi-garland Lord just once, did we then go to serve him in Vaikunta? Have we not stayed on here and used every opportunity, to praise his glory? Tell me.
