(2615)
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
பதவுரை
|
நல்வினையை தீர்ப்பான் |
– |
வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக |
|
அழகும் அறிவோம் ஆய் |
– |
அழகிய உபாயத்தை அறிந்தோமாக, |
|
குடங்கள் |
– |
குடங்களை |
|
தலை மீது எடுத்துக்கொண்டு |
– |
தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு |
|
சுழல ஆடி |
– |
ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி |
|
அன்று |
– |
முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக) |
|
அத் தட கடலை மேயார் தமக்கு |
– |
(முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு |
|
நிழலும் அடி தாறும் ஆனோம் |
– |
பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம். |
|
(வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.) |
||
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (அழகுமறிவோமாய்.) வல்வினையைத் தீர்ப்பான் அழகுமறிவோமாய், குடங்கள் தலைமீதெடுத்துக்கொண்டு சுழல ஆடி அன்று அத்தடங்கடலை மேயார் தமக்கு நிழலும் அடிதாறும் ஆனோம் என்று அந்வயிப்பது. கீழ்ப்பாடடில் “வல்வினையார் தாமீண்டடி யெடுப்பதன்றோ அழகு” என்று பாவங்களை யெல்லாம் துரத்தித் தள்ளுபடியானார். “நெடுநாளாகப் பாவங்களின் கீழே அமுக்குண்டிருந்த உமக்கு இன்று இப்படிப்பட்ட சக்தி எங்ஙனே உண்டாயிற்று?’ என்று யாராவது கேட்கக்கூடுமே; அவர்களுக்கு ஸமாதாநமாம்படி இப்பாட்டு அருளிச் செய்கிறார். வல்வினைகளைத் துரத்தித் தள்ளுவதற்கு அழகான ஒரு உபாயமறிந்தோம்; அஃது என்னென்னில்; எம்பெருமானுக்குத் திருவடி நிழல்போலவும் திருவடி ரேகை போலவும் விட்டு நீங்காது அத்தாணிச் சேவகமானோம். ஆகவே, காரியம் கை கூடிற்று என்கிறார்.
திருவாய்ப்பாடியிலே கோபாலக்ருஷ்ணனாய்த் திருவவதரித்துக் குடக்கூத்தாடின சரிமையிலே ஈடுபட்டுப் பேசுகிறது மூன்றாமடி. அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவர்கள். கண்ணபிரானும் சாதி மெய்ப்பாட்டுக்காக “குடங்களெடுத் தேறிவிட்டுக் கூத்தாடவல்ல வெங்கோவே” (பெரியாழ்வார் திருமொழி 2-7-7) என்றபடி அடிக்கடி குடக்கூத்தாடுவது வழக்கம். தலையிலே அடுக்குக் குடமிருக்க, இருதோள்களிலும் இரு குடங்களிருக்க, இருகைகளிலும் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது என்பர். இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திலொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாட லதனுக்கடைக்குப வைந்துறுப்பாய்ந்து” என்று மேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்குநல்லார்.
***= ‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந; நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” என்றபடி திருப்பாற்கடலில் நின்றும் எழுந்தருளி ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்துக் குடக்கூத்தாடி. அந்த ஆட்டத்தினாலுண்டான விடாய்தீர மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்து சயனித்து இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறுமானோம் என்கிறார்.
“அத்தடங்கடலை” என்றவிடத்து அகரச் சுட்டு- எந்தத் திருப்பாற்கடலில் நின்றும் வந்து அவதரித்தாரோ அந்தத் திருப்பாற்கடலிலேயே போய்ச்சேர்ந்தாரென்கைக்காக. மேயார்- மேவியவர்.
அழகுமறிவோமாய் = அழகு என்பதற்கு உபாயம் என்ற மட்டும் பொருள் கொண்டது பிரகரணபலத்தினாலென்க.
“வில்வினையும் தீர்ப்பான்” என்றும் பாடமுண்டு. தீர்ப்பான்- பான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.
நிழலுமடிதாறுமானோம் = ‘நிழலானோம்’ என்று முதலில் சொன்னார்; அதில் த்ருப்தி பிறக்கவில்லை; உலகத்திலே நிழலானது வ்யக்தியை விட்டுத் தனிப்படவும் காணப்படும். அப்படியல்லாமல் வ்யக்தியோடு உடன்பட்டே காணக்கூடியது பாதரேகையாகையால் “அடிதாறுமானோம்” என்று பின்னே சொன்னார். தாறு என்று அளவுக்கும் ரேகை (கோடு)க்கும் பேராகையாலே, பாதத்தளவான பாதுகையென்றும் பாதரேகையென்றும் பொருள் கொள்ளலாம். ஸம்ப்ரதாயத்திலே எம்பாரைச் சொல்லும்போது ‘எம்பெருமானாருடைய திருவடி நிழல்’ என்றும், ஸ்ரீவானமா மலைச்சீயரைச் சொல்லும்போது ‘ஸ்ரீமணவாளமாமுனிகளுடைய திருவடிரேகை’ என்றும், முதலியாண்டானைச் சொல்லும்போது ‘எம்பெருமானாருடைய பாதுகை’ என்றும் அவர்களுடைய தனியன்களில் அநுஸந்திக்கப்பட்டு வருமாறு காண்க. (“ராமாநுஜ பதச்சாயா” “ரம்யஜாமாத்ருநோகிந்தர் பாதரேகாமயம்” “பாதுகே யதிராஜஸ்ய” இத்யாதிகள் தனியன்கள்.)
மூன்றாமடியிலும் நான்காமடியிலும் “குடங்கடலை” “தடங் கடலை” என யமகம் அமைந்தமை காண்க.
English Translation
The Lord who reclines in the deep ocean, danced with pots on his head and all around, jubliantly knowing his power to end our karmas, as well as his beauty, we have become his footprint and his shadow.
