(2598)
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
பதவுரை
|
நெஞ்சே |
– |
ஓ மனமே! |
|
பேயார் |
– |
பூதனையானவள், |
|
சாயால் கரியானை |
– |
நிறத்தால் கரியனான கண்ணபிரானை |
|
உன் அறியார் ஆய் |
– |
உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய் |
|
(அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து) |
||
|
பேயர் ஆய் |
– |
அறிவுகெட்டவளாய் |
|
முலை கொடுத்தார் |
– |
(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்; |
|
நீ ஆர் |
– |
அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்? |
|
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;) |
||
|
தேம்பு ஊண் சுவைத்து |
– |
ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து |
|
ஊன் அறிந்து அறிந்தும் |
– |
(அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும் |
|
போய் |
– |
நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய் |
|
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி |
– |
அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (சாயற்கரியானை.) கீழ்ப்பாட்டில் “காட்டு உன்மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்; அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்; அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம்பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து ‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடியன்றோ; பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்; அந்தப் பூனையொடு உனக்கும் உறவுறை உண்டுபோலும்’ என்கிறார்.
பேயார் சாயால்கரியானை உள்ளறியாராய் பேயராய் முலை கொடுத்தார் = பேய்ச்சி முலை கொடுத்த வரலாறு ஐந்தாம் பாட்டினுரையிற் காணத்தக்கது. “பேய் முலை கொடுத்தது” என்றாவது, “பேய்ச்சி முலைகொடுத்தாள்” என்றாவது சொல்ல வேண்டிருக்க, பேயார் என்றும் கொடுத்தார் என்றும் பெருமை தோற்றக் கூறியது என்? எனில்; “உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்புனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்பது நன்னூற் சூத்திரம். ஆழ்வார்க்கு அப்பெய்ச்சியினிடத்துள்ள கோபத்தினாலும் அவளுடைய இழிவை விளக்க வேண்டியும் பெயார் என்றாரென்க; பெருமைப்படுத்திக் கூறினாரல்லர்.
சாயால் கரியானை என்றது- கரியசாயலையுடையனான கண்ணபிரானை என்றபடி. சாய் ***- (சாயா) என்ற வடசொற் சிதைவு; நிறம் எனப்பொருள்படுமிங்கு. உள் அறியாராய் = இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்; நிறமழகிய பெருமானை நாம் கிட்டி நல்ல எண்ணத்துடன் பக்தியைச் செலுத்தி உள்ளூற அநுபவிக்கலாமென்று ஆசைப்படாதவளாய் என்னுதல்; (அன்றி.) உள் அறியாராய் = உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய்; ‘இவன் ஸாக்ஷாத் பரமபுருஷன்; இவளைத் தொலைக்க நம்மாலாகாது; நாம் தொலைந்திடுவோமேயன்றி இவனைத் தொலைக்க நாமோர்?’ என்று உண்மையுணராதவளாய் என்னுதல்.
பேயராய் முலை கொடுத்தார் = விவேகமற்றவளாய் முலைகொடுக்கிற வியாஜத்தாலே அப்பெருமானை அழிக்கப்பார்த்தாள் என்கை. “உள்ளறியாராய்” என்றவளவே போதுமாயிருக்க, மீண்டும் “பேயராய்” என்றது அவளுடைய ஞானஹீனத் தன்மையை நன்கு விளக்குதற்காகவாம்.
இங்ஙனே பூதனை செய்த செயலைச் சொன்னவுடனே “நீ யார்?” என் கையாலே ‘அந்தப் பூதனைக்கு நீ என்ன ஆக வேண்டும்? அவளுக்கு நீ முன்னே பிறந்தாயோ? பின்னே பிறந்தாயோ?’ என்று கேட்பதாகப் பொருள்படுகின்றது.
நெஞ்சை நோக்கி நீ யார்? என்று கேட்ட ஆழ்வாரைப் பார்த்து அந்த நெஞ்சானது, ‘ஆழ்வீர்! படுபாவியான பூதனை செய்தாற்போலே நான் என்ன கொடுந் தொழில் செய்து விட்டேன்? எனக்கு அவளை ஒப்புக் கூற வேண்டிய காரணம் யாது? சொல்லீர்” என்று கேட்க; அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் ‘தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய் கைநீட்டல் பார்த்தி’ என்று. ஊண் என்று இவ்விடத்தில், வியாந்தரங்களைச் சொல்லுகிறது. உண்ணப்படுவது ஊண்; சப்தாதி விஷயங்கள் செவிவாய் கண் முதலிய இந்திரியங்களினால் உண்ணப்படுதல் (அநுபவிக்கப்படுதல்) பற்றி அவை ஊணெனப்படும். தேம்புதலாவது நாசமடைதல். தேம்பூண் என்றது- ஆத்மா நசிக்கும்படியான விஷயாந்தரங்கள் என்றபடியாயிற்று. பகவத் விஷயத்தை அநுபவித்தாலே ஆத்மா ஸத்தை பெறுவதற்கு ஹேது வென்றும், மற்ற விஷயங்களை அநுபவித்தல் ஆத்மா நாசமடைவதற்கு ஹேதுவென்றும் உணர்க. இப்படிப்பட்ட விஷயங்களைச் சுவைக்கையானவது இனிதாக அநுபவித்தல். அப்படி அநுபவிப்பதனாலே உண்டாவது ஊன்; ஊநம் என்ற வடசொல் ஊனென்று கிடக்கிறது; குறைவு என்று பொருள்; நெடுநாளாக விஷயாந்தரங்களை அநுபவித்து வருவதனாலே நீ மிகவும் குறைவு அடைந்துவிட்டாய்; (அதாவது) அயோக்யனாய்விட்டாய்; இந்த அயோக்யதை உனக்குத் தெரியாமையில்லை; நன்கு தெரிந்திருந்தும், உன்னுடைய நிலைமைக்குத் தகாததொரு தப்புக் காரியத்தை நீ செய்ய நினைப்பது இன்னமும் கெடுதியை விளைத்துக்கொள்ளப் பாம்பின் வாயிலே கை நீட்ட முயல்வதுபோலிரா நின்றது. அயோக்யரான நமக்கு எம்பெருமானை யநுபவிக்க ஆசை பிறப்பது தப்பு; அது அப்பெருமானுக்கு அவத்யம்; நமக்கும் ஸ்வரூப நாசம்- என்று தெளிந்து ஒதுங்கி யிருக்கவேண்டியிருந்தும் நீ பகவதநுபவத்திற்கு நாக்கை நீட்டிச் செல்லுகிறாயே! இதைவிட வேறு தீவினையுண்டோ? பாம்புபோலே அநார்த்தத்தை விளைக்கவல்ல தீவினையன்றோ இது. இந்தப் பாம்பின் வாயிலே கை வைக்கவன்றோ நீ பார்ப்பது. ஆகையாலே பூதனைக்கு நீ உறவாகவே யிருக்க வேண்டுமன்றோ. பூதனையானவள் தனக்குக் கேடு வரும்படியான காரியத்தை எப்படிச் செய்தாளோ, அப்படி. நீயும் உனக்குக் கெடுதிவிளைவிக்கும்படியான காரியத்தைச் செய்யப் பார்க்கிறாயாகையாலே பூதனையோடு ஒப்பாயன்றோ நீ…
பூதனையின் காரியத்தால் எம்பெருமானுக்கு யாதொரு கேடும் விளையாதது போல, ஆழ்வாருடைய பதவதநுபவவிருப்பத்தாலும் பகவானுக்கு யாதொரு கெடுதியும் விளையமாட்டாது; இவருடைய அதிசங்கை மாத்திரமேயுள்ளது- என்பதும் இதில் குறிப்பிடப்படுகிறது.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி:- “பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாளன்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத்தனையாயிறே; உன்னைப் பார்த்தால் பூதனை நித்யஸூரிகளோடொக்குமிறே.”
“பாம்பின்வாய்” என்னாமல் பாம்பார்வாய் என்றது திணைவழுவமைதி; இங்கு ஆர் விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும். பார்த்தி = முன்னிலையொருமை வினைமுற்று.
English Translation
O Heart! Have you not cast me into deep despair by your actions? What use dilating on this? Go, you were never the one to heed even my best advice. Know that praising Krishna is the only good.
