(2597)

(2597)

வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,

இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,

எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்

தம்மால்காட் டுன்மேனிச் சாய்.

 

பதவுரை

வழக்கொடு மாறுகொள் அன்று

(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;

(அஃது என்னவெனில்)

அடியார் வேண்ட

(மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்

இழக்கவும் காண்டும்

(மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;

இறைவ

ஸ்வாமீ!

இழப்பு உண்டே

(என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)

யான் வேண்ட

என்னுடைய வேண்டுகோளுக்காக

எம் ஆள் கொண்டு ஆகிலும்

என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது

என் கண்கள் தம்மால்

எனது கண்களுக்கு

உன்மேனி சாய்

உனது திருமேனியின் ஒளியை

காட்டு

காட்டியருள வேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வழக்கொடு மாறுகொளன்று.) கீழ்ப்பாடடி“ல் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்; வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நன்கு கண்டு வாழ்த்த வேணுமே; அப்படிக்கு அவனுடைய திவ்யமங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு; அது கிடைக்காமல் என்னவென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி ‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருளவேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கொடுமாறுகொளன்று- அடியேன் பிரார்த்திக்கிற விஷயம் வழக்கோடு மாறுகொண்டதன்று; வழக்காவது நியாயம்; நியாயத்தோடு மாறுபட்டதன்று; நியாத்திற்கு ஒவ்வாததை அடியேன் விண்ணப்பம் செய்கின்றிலேன்; நியாயமானதையே சொல்ல வருகின்றேனென்றபடி.

வார்த்தை சொல்லத் தொடங்கும்போதே இன்ன விஷயமென்று சொல்லாமலே ‘அநியாயமாக நான் ஒன்றும் சொல்லவரவில்லை’ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ஆழ்வீர்! நீர் சொல்வது நியாயமோ அநியாயமோ விஷயத்தைக் கேட்டன்றோ நான் தெரிந்து கொள்ள வேண்டும்; சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன; அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும் என்கிறார். அதாவது- சேஷபூதராயுள்ளவர்கள் சேஷியைநோக்கி ஏதாவ அபேக்ஷித்தார்களாகில் சேஷியானவன் தான் நஷ்டப்பட்டாகிலும் சேஷபூதர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக் காணாநின்றோம் உலகத்தில்- என்றபடி (அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும்.) ‘நம்முடைய அடியார்களன்றோ நம்மை வேண்டுகிறார்கள்; இவர்களுக்கு நாம் உயிரைவிட்டாகிலும் பரிந்து காரியம் செய்ய வேண்டாவோ’ என்று நெஞ்சுகனிந்து, பொருளையோ உடலையோ உயிரையோ எதையேனும் இழப்பதற்கும் இசைந்து தங்கள் பேறாகக் காரியஞ் செய்யக் காண்கிறோமிறே என்கை.

இப்படி ஆழ்வார் சொன்னதைக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! நன்றாகச் சொன்னீர்; உமக்காக என்னை உயிரிழக்கச் சொல்லுகிறீரோ இப்போது; வார்த்தை அழகாயிருக்கிறது!’ என்றான். எம்பெருமான் இப்படி திருவுள்ளங் கன்றினாற்போல் அருளிச்செய்வதைக் கேட்ட ஆழ்வார் அநுதபித்து இறைவ! இழப்புண்டே? என்கிறார். அதாவது- உலகில் நடக்கிறபடியை ஏதோ நான் எடுத்துக்காட்டினேனேயொழிய, தேவரீருக்கு இழவு உண்டாகவேணுமென்று அடியேன் சொன்னேன்; தேவரீர் எதையும் இழக்க வேண்டா- என்கை.

இதுகேட்ட எம்பெருமான், “ஆழ்வீர்! உலகத்தில் தலைவராயுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழந்தாகிலும் காரியம் செய்கிறார்களென்று எடுத்துக்காட்டின் உம்முடைய கருத்து எனக்குத் தெரியாமையில்லை; நீர் மறைப்பதில் என்ன பயன்? உம்முடைய எண்ணப்படி நான் எதைவேணுமானாலும் இழந்து காரியம் செய்யத் தடையில்லை; “அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர்; நீர் மெய்யே அடியாராகிலன்றோ நான் காரியம் செய்வேன்; நீர் அடியவர்தானோ?’ என்று கேட்டான்.

அதற்கு ஆழ்வார் எம்ஆட்கொண்டாகிலும் என்கிறார். நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால் நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை. எதைக்கொண்டு உம்மை நான் அடியவராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க; அதற்கு ஆழ்வார் யான் வேண்ட என்கிறார். ***- = ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷ்யனுடைய அபேடிக்ஷயை மாத்திரமன்றோ ரக்ஷகனான நீ எதிர்பார்த்திருப்பது; நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையேகொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே; என்னுடைய அடிமைக்கு இசைந்ததுதானே உன்னை இறைவனென்றேன்- என்றார். அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவுள்ளமுவந்து ‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? சொல்லும்’ என்ன; என் கண்கள்தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார். உனது திருமேனியின் சாயலை என்கண்களுக்குக் காட்டவேணுமென்னுமிவ்வளவே நான் வேண்டுவது என்றாராயிற்று.

கண்கள்தம்மால்- உருபு மயக்கம்; கண்கள் தமக்கு என்க. அன்றி, மூன்றாம் வேற்றுமைப்பொருளைக் கொண்டு, உன் மேனிச்சாயை என் கண்களால் நான் காணும்படி செய் என்றுரைக்கவுமாம். சாய் = ** (சாயா) என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.

இப்பாட்டுக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிய வியாக்கியானத்தில் சிறிதுவேறுவகையான பொருள் கொள்ளப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. அப்பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க.

 

English Translation

O Lord! this is no breach of conduct, you could make on exception for your devotees, it is no great loss.  I Pray you, at least because we are your devotees, let our eyes see the radiance of your dark frame.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top