(2549)

(2549)

சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே

தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று

வாழ்கின்ற வாறிது வோவந்து தோன்றிறு வாலியதே.

பதவுரை

சூழ்கின்ற

(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்

ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்

சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை

கறுத்த செறிவை
போழ்கின்ற

விளக்கிற
அம்பிள்ளை திங்களும்

அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க

(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து

(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்

ஒரு துணையும்மில்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு

(இயல்பான) மேனிநிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு

(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று

சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ

இப்படியோ?

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் இது. நாயகனைப் பிரிந்த நிலையில் பகலிற் காட்டிலும் இரவில் இருளில் மிக வேதனைப்படுகிற நாயகி, அப்பொழுது இளம்பிறை தோன்றி அவ்விருளை அழிக்கத் தொடங்கியதை நோக்கி இனி நமக்கு இருளினாலாகுந் துயரம் குறைவுபடுமென்று கருதி ஒருவாறு தணிந்திருக்கத் தொடங்கிய வளவிலே, இளம்பிறையும் விரஹிகளுக்குத் தாபஹேதுவான பொருள்களும் ஒன்றாதலால் அது இவளை இருளினும் அதிகமாக வேதனைப்படுத்த, அது நோக்கி அத்தலைவி இரங்கிக் கூறியதென்க. எனக்குப் பகையாய்ச் சூழ்கிற இருளைப் பிளந்தொழிக்கிற இளம்பிறை அவ்வருளின் ஒழிவுக்கு மகிழ்கிற என்னையும் பிளந்தொழிக்கட்டும். பிறைதோன்றி இருள் அகன்றதைக் கண்டு இனி என் துயரங் குறைந்து இழந்த மாமை நிறத்தைப் பெற்று வாழ்வேனென்று கருதிய எனக்கு அந்தோ! பிறை தோன்றியது இங்ஙனமோ முடிந்தது! என்கிறான். துயர் நீக்க வந்தானென்று கருதப்பட்டவன்தானே துயர¬ மிகுவிக்கின்றானே! என்செய்வேன்! என்கிறாள்.

வாலியது – வாலிமை யென்னும் பண்பிணடியாய் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலனையும் பெயர். இதுவோ வந்து தோன்றிற்று- இப்பிறையோ வந்து தோன்றியது. வாலியதே- இதன் தன்மை சீரிதாகவுள்ளது! என்றுங் கொள்ளலாம்; இப்பொருளில் விபரீத லக்ஷனையால் வெறுப்புத் தோன்றும். பிள்ளை-  இளமைப்பெயர்.

தாம் நினைத்தபடியே பேறு கிடைத்திடாமையா லுண்டான மோஹாந்தகாரமும் இதனையடக்கி மேலிடுவதான தத்துவஞானப் பிரகாசமும் இரண்டும் எம்பெருமானைச் சேராது நிலையில் தம்மை ஒன்றினுமொன்று மிகுதியாக வருத்தித் தமது ஸ்வரூபத்தையும் அழிக்கவிருந் தன்மையை ஆழ்வார் வெளியிடுதல் இதற்கு உள்ளுறை பொருள். சந்திரோதய மென்றது விவேகத்தை.

English Translation

The tender Moon, come to break the pitch darkness of the encircling gloom of night, also breaks my heart.  This lonely self has a heart that years for the Tulasi flower alone, Is this the way it is going to be today?  Alas, the enemy has emerged stronger.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top