(2548)
ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம் பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு அஃதேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ உரை யீர்எம்மை அம்மனை சூழ்கின்றவே.
பதவுரை
| ஊழிகள் ஆய் |
– |
காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே) |
| உலகு ஏழும் உண்டான் |
– |
உலகமுழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன் |
| என்றிலம் |
– |
என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) குறினோமில்லை. |
| களா பழம் கண்டு |
– |
களாப்பழத்தைப் பார்த்து |
| பழம் வண்ணம் ஆழி என்றேற்கு |
– |
‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று (குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு |
| அஃதே கொண்டு |
– |
அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு |
| அன்னை |
– |
(எனது) தாய் |
| இவளோ நாழ் என்னும் |
– |
‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்; |
| ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும் |
– |
உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு இது என்று குற்றங் கூறுவன்; |
| தோழிகளோ |
– |
தோழிகளே! |
| எம்மை அம்மனை சூழ்கின்ற |
– |
எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு |
| உரையீர் |
– |
நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள் |
.
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தாயின் முனிவைத் தலைவி தோழியர்க்கு உரைத்த பாசுரம் இது. நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து நாயகி வருந்துமளவில் அக்களவொழுக்கம்மெல்ல வெளிப்பட்டு ஊரெங்கம் பழி பரவ, அதனையறிந்த தாய் ‘இது நம் குடிக்குக் குறையாம்’ என்று கருதி இவளை நிர்பந்தத்திலே வைத்திருக்க, அவளுக்கு அஞ்சி நாயகி தன் ஆற்றாமையால் வாய் பிதற்றுதலொன்றுஞ் செய்யாத ஆற்றாமையை அடக்கிக் கொண்டிருக்க, அவ்வளவிலே சிலர் களாப்பழங்கொண்டு விற்க, அதனை நோக்கி நாயகி ‘இதன் நிறம் கடல்போலுள்ளது’ என்று பாராட்டிக் கூற, ஏற்கனவே இவன்மேல் குறிப்புக் கொண்டுள்ள தாய் ‘இவள் இப்படி சொன்னது நாயகனது நிறத்தைப் பாராட்டிக் கூறியபடியாம்’ என்று உட்கொண்டு ‘இப்படியும் ஒரு அடங்காத்தன்மை யுண்டோ’ என்று வெறுக்க, அதற்குக் கலஙகிய நாயகி தோழியரை நோக்கி ஒருவகையான உட்கருததையுங் கொண்டு சொல்லவறியாத எனது தன்மையை நீங்கள் அவளுக்குச் சொல்லி அவளுடைய கோபத்தைத் தனிப்பீராக வென்று வேண்டிக் கொள்ளுகிறாளென்க.
சில பிரதிபந்தங்களினால் நாயகனை அடையப் பெறாத நாயகி, அவன் தன்னை வெளிப்படையாக விரைவில் விவாஹஞ் செய்து கொள்ள வேண்டுமெனக் கருதிச் சிறைப்புறத்தானாகுமளவில் தோழியர்க்குச் சொல்லுவாள் போன்று ஊர்ப்பழி மிகவும் பரவியிருக்கிறபடியையும் அதனைக் தாயுமறிந்து வெறுக்கிறபடியையும் தெரிவிக்கும் முகத்தால் விரைவில் வெளிப்படையாக விவாஹஞ் செய்து கொள்ளத் தூண்டியதாமிது. அவர் பரவவும் தாய் முனியவும் இருக்கிற இக்களவொழுக்கம் இனி ஆகாது, மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹருசியை வெளியிட்டவாறு.
ஊழிகளாய் உலகேழு முண்டானென்றிலம் = ஊழிகள் என்ற பன்மை காலத்தின் பகுப்புகளைக் குறிக்கும்; ஸகல காலங்களுக்கும் நிர்வாஹகனாய் மஹாகல்பகாலத்தின் முடிவிலே திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவனான எம்பெருமான் என்று அவன் திருநாமத்தையோ தொழிலையோ பெருமையையோ ஒன்றையும் நான் வெளிப்படையாகச் சொன்னேனில்லை; ஒருகால் அப்படி சொல்லியிருந்தேனாயின் தாய் குறை கூறுவது தகுதியேயாம்; அந்தோ! ஆதாரமொன்று மின்றிக்குறை கூறுகின்றானே யென்றவாறு. ஊழிகளாய் என்பதற்கு- கல்பமும்,அக்காலத்தில் அழிவு செய்கிற கடல் நெருப்பு முதலியனவுமாகிய இவற்றின் வடிவமாய் என்றும் உரைப்பர். என்றிலும்- என்று சொல்லிற்றிலோம்.
ஊழிகளாயுலகேழு முண்டான என்று சொல்லவில்லையாகில் பின்னை என்ன வென்று சொல்லிற்றென்ன. பழங்கண்டு ஆழிகளாம் பழ வண்ணமென்றேற்கு’ என்கிறான். (விற்பனைக்காக வீதியில் வந்த) களாப்பழத்தைப் பார்த்து இப்பழத்தின் நிறம் கடலின் நிறம் போன்றுள்ளதென்று உட்கருத்து ஒன்றுமின்றியே இவ்வளவே சொன்னேன்: குறிப்பொருளொன்றுங் கருதாது இயல்பாகச்சொன்ன இச்சொல்ல¬யே பற்றிக்கொண்டு எனது தாய் “இப்பெண்பிள்ளை என் சொற்கேளாது தன் நினைவின்படி ஸ்வதந்த்ரமாய் நடக்குஞ் செருக்குடையவளாயினள்’ என்று கடுஞ்சொல் கூறத்தலைப்பட்டாள். களாம் பழவண்ணம் கடல் வண்ணமென்று இவள் சொன்னதானது வெறுமனோ? உலகமுண்ட பெருவாயனுடைய திமேனி நிறத்தைச்சொன்னபடியன்றோவென்று குற்றங்கூறுகின்றான்; தோழிமார்களே! இப்படி எனது தாய் என்னை மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு நீஙக்ளே ஸமாதானஞ் சொல்லித் தெளிவிக்க வேணுமென்றாயிற்று.
நாழ் -குற்றம்; “நாமா மிகவுடையோம் நாழ்” “நாழாலமர் முயன்ற” என்ற திருவாந்திதிப் பாசுரங்களில் இப்பொருளில் பிரயோகங்காண்க. பெரியாழ்வார் திருமொழியில் “பல நாழஞ்சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்ற விடத்தில் இச்சொல் ‘அம்’சாரியை பெற்று வந்தமையும் காண்க. இங்கே, நாழுடையாள் என்ற பொருளில் ‘நாழ்’ என்றது உபசார வழக்கு.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது- ஆழ்வார் எம்பெருமானிடத்தில் தமக்கு உண்டான ஈடுபாட்டினை மிகுதியால் அப்பெருமானது பயனாகிய வடிவத்தின் கடல்போலளவிடப்படாத பெருமையைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்ட ஞானிகள் அவ்வார்த்தைக்கு வேறு பொருள் சங்கித்து, ஸாதநாந்தர நிஷ்டையுடையோர்போல உபாஸஸநக்கு உரியதொரு காரணவடிவத்தைப் போற்றினதாக நினைத்து அது தகுதியன்றென்று அறியாமல் ஆரோபித்துச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைத் தெளிவியுங்க ளென்று அருளிச் செய்தலாம். (ஊழிகளாய் உலகேழு முண்டானவற்றிலம்) ஸாதுநாந்தா நிஷ்டையுடையார்போல உபாஸகைக்கு உரிய காரணவடிவத்தைச் சொன்னோமில்லை. (பழங்கண்டு ஆழி களாம்பழ வண்ணமென்றேற்கு.) பயனாகிய வடிவத்தைக் குறித்து அவ்வடிவம் கடல்போலும் என்று கூறிய எமககு. (அஃதே கொண்டு) அந்தச் சொல்லுக்கே வேறு பொருள் கொண்டு. (அன்னை) ஞானிகள் (இவளோ நாழ் என்னும்) இவரே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விரோதியான ஸ்வாதந்திரியத்தை யுடையாரென்று குறையேறிட்டுச் சொல்வார்கள். (ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்) உபாஸகைக்கு விஷயமாகின்ற காரணவடிவத்தை யாம் கூறியதாகக் குற்றங்கூறுவார்கள். (அமனை எம்மை சூழ்கின்ற) தாய்போ லெம்மிடத்தும் பரிவுடையான் ஞானிகள் எமது ஸ்வரூபத்துக்கு எங்கே குறைபாடு வருகிறதோவென்று ஏறிட்டுச் சங்கித்த சங்கைக்கு (தோழிகளோ! உரையீர்) என நெஞ்சரிந்த அன்பர்களே! நீங்கள் பரிஹாரஞ் சொல்லித் தெளிவிக்கவேணும் என ஸ்வாபதேசப்பொருள் காண்க. ப்ரபத்திமார்க்கத்தை யனுட்டிப்பவர் எம்பெருமானது பயனாகிய வடிவத்தையே கருதிப் பாராட்டக் கடவரென்றும், அதுவே முக்தி பெறுவதற்குச் சிறந்த வழியாகுமென்றும், உபாஸகைக்கு உரிய காரணவடிவத்தையே பாராட்டி உபாளித்தல் முக்தி பெறுவார்க்கு அவ்வளவாகச் சிறவா தென்றும் உணர்க.
இப்பாட்டில் (இரண்டாமடியில்) ஆய்தம் உயிர்போலொலித்தது; அலகிட்டுக் காண்க:
English Translation
O Sakhis! Seeing the dark Kala fruit, I did not say the lord swallowed the seven worlds age after age, but only said, “The sea has the kala hue”. On that account alone my mother says, “She is guilty, she spoke of the hue of the lord who swallowed the Earth”, and beats me, Tell me, what should I do?
