(2540)

(2540)

வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,

தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ

கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்

கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே.

பதவுரை

வண்ணம் சிவந்துள

திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் வழிய

பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையையுடைவையும்
தண் மெல் கமலம் தடம்போல் பொலிந்தன

குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம்போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்

இத்திருக்கண்களோ
கண்ணன்

கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்

திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்

திருமுகமண்டலத்திலே
காதல் செய்தேற்கு

வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்

மனத்திலே
புகுந்து

பிரவேசித்து
இ காலம்

இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற

(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனை இயற்பழித்த தோழிக்கு நாயகி இயற்பட மொழிதல் இது. அதாவது- நாயகனைப் பிரிந்து நாயகி வருந்தும் நிலையில் அவளைத் தோழி பலவிதங்களாலும் ஆற்றுவதுண்டு; நாயகனுடைய கொடுமையைச் சொல்லிப் பழித்து அம்முகத்தாலே ஆற்றுதலும் ஒருவிரதமாதலால், அவ்விதமாகச் சிறிது ஆற்றுதற்பொருட்டுத் தோழி அவன் கொடுமையைச் சொல்லிப்பழிக்க, அது பொறுக்கமாட்டாது நாயகி ‘இப்பொழுதும் அவனது கண்கள் என்னெஞ்சிலும் கண்ணிலும் தோன்றி நீங்காதிருக்கின்றன; இங்ஙனம் அன்போடு அணியனாயுள்ளவனை, அநாதரஞ் செய்து பிரிந்து சென்றாளென்று நீ கொடுமை கூறுகின்றது என்னோ? என்று கூறுகின்றானென்க.

சிவந்த நிறமுள்ளவையாய்க் குளிர்ந்த பார்வையுமுடையவையாய்த் தாமரைத்தடாகம்போல விளங்குகின்றவையான இத்திருக்கண்கள் அப்பெருமானது திருமுகமண்டலத்திலே வேட்கை வைத்த எனது மனத்திலே புகுந்து இப்பொழுதும் விட்டு நீங்காமல் என்னோடிருக்கின்றனவே, ஏன் ப்ரமித்துப் பழிக்கின்றாய்! என்றவாறு.

வண்ணஞ் சிவந்துள = என்பக்கல் இவர்க்குண்டான அநுராகத்தால் கண்கள் சிவந்துள்ளன என்பது உட்கருத்து. சீற்றத்தாலும் கண்கள் சிவக்கக் கூடுமாதலால் அங்ஙனமாகாது அநுராகத்தாலே சிவந்தனவென்று கொள்வதற்குக் காரரணமுண்டோ வென்ன, ‘வானாடமருங் குளிர்விழிய’ என்கிறாள்; சீற்றத்திற்கு விரோதியான குளிர்ச்சியுள்ளதனால் வேட்கையால் சிவந்துள்ளனவென்பது திண்ணமென்க. தாம் இவையோ= இடைவிடாத நினைப்பினால் இவள் மனத்தில் மாத்திரம் தோன்றுதலன்றி அந்நினைவின் முதிர்ச்சியால் இவளெதிரிலும் எப்பொழுதும் உருவெளிப்பாடாகத் தோன்றுமாறு இதனால் அறியத்தக்கது; ‘இவை என்பது ப்ரதயக்ஷயர்தேசமாதலால் பிரியாமையும் அதற்குக் காரணமான அன்புடையனாய் இடையீடின்றித் தன்னுள்ளும் நெஞ்சுள்ளும் நீங்காது நின்று தோன்றுகிறவனை அன்பின்றிப் பிறந்தானாக நினைப்பதும் சொல்லுவதும் தகுதியில்லை என்பது தோன்ற ‘அடியேனோடு இக் கலாமிருக்கின்றவே’ என்றது; ஆகவே ஈற்று ஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம். தன்னை நெடுநாள் பிரிந்து வருத்துங்காலத்திலும் நாயகனைப் பிறர்பழிக்கக் கேட்டுத் தரியாது மறுத்தல் கற்பின் குணம்.

English Translation

Aho! The cool heavenly gaze of these red-lotus-like eyes spreads a radiance everywhere in my love-filled heart.  The lord Kirshna, Tirumal, appears with such a face before me, this time to stay on forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top