(2539)
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,
அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே.
பதவுரை
| இரக்கினும் |
– |
எவ்வளவு வேண்டிக் கொண்டாலும் |
| ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது |
– |
இவள் ஒரு பெண் மகளென்று கருதியும் இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல் |
| கரு கடல் |
– |
கரியகடலானது |
| அறையோ என நின்று அதிரும் |
– |
(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும் நிலைநின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது; |
| ஓ |
– |
இஃது ஒரு கொடுமையே |
| அரவு அணைமேல் |
– |
சேஷசயனத்தின் மீது |
| பள்ளிகொண்ட |
– |
சயனித்தருளா நின்ற |
| முகில் வண்ணனே |
– |
காளமேகம் போன்ற வடிவுடையவனே! |
| ஈங்கு |
– |
இவ்விடத்தில் |
| இவள்தன் |
– |
இவருளுடைய |
| நிறையோ |
– |
நினைக்குணமோவென்னில், |
| இனி |
– |
இனிமேல் |
| உன் திருஅருளால் |
– |
உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்) |
| அன்றி |
– |
பாதுகாத்து வைக்க முடியாது; |
|
காப்பு அரிது |
||
| முறையோ |
– |
(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ? |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நாயகனை நோக்கி நாயகியினாற்றாமையைத் தோழி கூறுதல் இது. தலைமகனாற்றாமை கண்டு வருந்தாநின்ற தோழி தன் ஆற்றாமையாலே தலைமகன உட்கொண்டு விளித்து முன்னிலைப்படுத்தி, தலைமகள் கடலோசைக்கு ஆற்றாது வருந்தும் நிலையையும், இதுவரையிலும் தான் அவளை ஒருவாறு ஆறிவைத்திருந்தமையையும், இனித் தன்னாலும் ஆற்றவொண்ணாதபடி வருத்தம் விஞ்சுகின்றபடியையும் கூறுகின்றான்.
நோவுபடுவோரைக் கண்டு தானே இரங்க வேண்டுவது ப்ராப்தம்; அப்படி செய்யாததோடு , இவளது பெண்மையையும் ஸௌகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு யாம் வேண்டிக் கொண்டாலும் இப்பாழுங்கடல் இரங்குகின்றதில்லை; ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்றபடி எவ்வளவு கொடுமையுடையாரும் இங்கும்படியான பெண்தன்மைக்கும் இது இரங்குகிறதில்லை என்றால். மேலில் காணும் கருமைநிறத்தோடு உள்ளுள்ள கருமையையும் (கொடுமையையும்) காட்டுவதற்குக் ‘கருங்கடல்’ என்றது. கறுப்பு வெகுளிப் பொருளாதாதலால் ‘கோபமுடைய கடல்’ என்றுமாம்.
‘இறையோ உரைக்கிலும்’ என்றும் பாடமுண்டாம்.
இவள் தன் = தன்னைத் தான் காத்துக்கொள்ள வல்லமையில்லாதவளான இவளுடைய என்றபடி. நிறை – அடக்கம். இனி = கடலாகிய பெரும்பகைவு முண்டாய்த் தனக்கு நிறைகாக்கும் சக்தியுமில்லையான பின்பு என்றபடி, இனி இவள் தன் நிறை உன் திருவருளாளன்றிக் காப்பரிது = நீ வந்து ஸம்ச்லேஷித்தாலன்றி இவள் அடங்கியிருக்கமாட்டாள் என்றவாறு. நீ படுங்கைவாய்ப்பு அறிந்து கிடக்க, படுக்கைகொள்ளாத இவளுக்கு இடம்கொடாதவிது முறைமையன்று என்கிறாள். ‘முறையோ அரவணைமேற் பள்ளிக்கொண்ட முகில்வண்ணனே!’ என்பதனால், அரவணைமேற்பள்ளி கொண்ட = இவள் கருத்தரையிலே கிடக்க, நீர் மெல்லிய படுக்கை தேடிக்கிடக்கிறீரே! இ நல்ல முறைமைதான்! முகில் வண்ணனே! = மேகம்போல் உதாரணகுணமுடைய நீ இவளது துயரந்தீர உதவாதிருப்பதும் ஒரு முறைமைதான்!
ஏற்கனவே எம்பெருமானைச் சேரப் பெறாது வருந்துகிற ஆழ்வார் ஸம்ஸார ஸாகரத்தின் கோலாஹலத்தையுங்கண்டு அதிகமாகத் தளர்கிறபடியைக் கண்ட அன்பர், தங்களால் இக்கிளர்ச்சி பரிஹரிக்கவொண்ணாதென்று கருதித் தங்களாற்றாமை தோன்ற எம்பெருமானைக் குறித்து விண்ணப்பஞ் செய்த பாசுரமாயிது. நாஙகள் எவ்வளவு முயன்றாலும் இவரது அடிமைத் தன்மையைக் கருதியும் சிறிதும் பின்வாங்காமல் கொடிய ஸம்ஸாரஸாகரம் பயங்கரமாய் இவரை வருத்துகின்ற; இனி இவரது ஸ்வரூபத்தை உனது திருவருளாலன்றிப் பாதுகாக்க வொண்ணாது; ஆதிசேஷனாகயி ஒரு கேதநனை எப்பொழுதும் விட்டு நீங்காது அவனிடத்தில் ஸகலவிதமான கைங்கரியங்களையும் கொண்டு அருள் காட்டுவதுபோல இவ்வாழ்வாரிடத்தும் அருள் காட்டவேணும்; உனது இனிமையான வடிவை இவர் அநுபவிக்கப் பெறும்படி செய்வதே உனக்குத் தகுதி என்றதாயிற்று.
English Translation
The dark ocean does not relent even if we plead mercy, nor pity her for being a helpless female, and continues to shout victory, alas! O Lord who reclines here on a serpent! Is this proper? Alas, no more can she save her charm except through your grace.
