(2362)

(2362)

நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்

நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்

பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,

ஓராது நிற்ப துணர்வு.

 

பதவுரை

என் நெஞ்சமே

எனது மனமே!,

நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்

(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)

நிலைப்பெற்று

காலூன்றி நின்று

பேசாய்

அவனைப் பேசப்பார்

நினைக்குங் கால்

நாம் ஒருகால் நினைத்தாலும்

நெஞ்சத்து

நெஞ்சுதன்னிலே

பேராது நிற்கும்

விட்டுநீங்காமல் நிலைத்து நிற்கின்ற

பெருமானை

எம்பெருமானை

உணர்வு

நமது நெஞ்சானது

ஓராது நிற்பது என்கொலோ

அநுஸந்தியாமல் வானாவிருப்பது ஏனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில் முன்னடிகளிரண்டும் நெஞ்சை விளித்து உபதேசிப்பன், பின்னடிகளிரண்டும் தம்மில்தாம் வருந்திச் சொல்லிக்கொள்வன். என்னெஞ்சமே! (அவன்) நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப்பெற்றுப் பேசாய் – மனமே! அப்பெருமானுடைய ஐச்வரியம் சிந்திக்கவும் முடியாத்தாகையாலே ‘இப்படிப்பட்ட பரமேச்வரனை நாம் எங்ஙனே பேசுவது?‘ என்று பின்வாங்கப்பாராமல், அவனது எளிமைக் குணங்களை நினைத்தாகிலும் கூசாமல் நிலைநின்று பேசப்பார் என்றபடி.

இப்படி உபதேசித்தவளவிலும், நெஞ்சானது அவனுடைய பரத்வத்தையே நினைத்துக் கூசிநிற்பது கண்டு, “நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராதுநிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ?“ என்கிறார். நாம் ஒருகால் நினைத்துவிட்டாலும் அதையே வியாஜமாகக்கொண்டு நம் நெஞ்சைவிட்டுப் பேராமல் ப்ரதிஷ்டிதனாயிருக்கும் பரமஸுலபனான பெருமானை நெஞ்சானது நினைக்கக் கூசுகின்றதே! இஃது என்ன பாவமோ! என்றவாறு.

உணர்வு என்ற சொல் – ஞானத்திற்கு வாய்த்தலையான நெஞ்சைச் சொல்லுகிறது இங்கு.

கீழ்ப்பாட்டில் “அரவணையான் சேவடிக்கே நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு“ என்று அருளிச்செய்தவர் அடுத்த இப்பாட்டில் இங்ஙனே அருளிச்செய்யக் காரணமென்? என்று சங்கிக்கக்கூடும் கேண்மின், தம்முடைய நெஞ்சு பகவத்விஷயத்திலே அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாட்டிற்கூறினது உண்மையே அந்த பகவத் விஷயத்தின் பெருமையைப் பார்த்தவாறே அதற்குத் தகுந்தவளவான ப்ராவண்யம் உண்டாகவில்லையாக நினைத்து ‘பகவத் விஷயத்தில் நாம் இன்னம் அடியிடவேயில்லை போலும்‘ என்று தோன்றி இப்பாட்டருளிச் செய்தாரென்க. ஒருவன் வித்வானாயிருந்தாலுங்கூட இன்னமும் கற்றுணரவேண்டிய கல்விகளின் எல்லையில்லாமையை நினைக்குங்கால் ‘நாம் என்னகற்றோம், ஒரக்ஷரமும் கற்றிலோம்‘ என்னும்படியாயிருக்குமன்றோ, அது போலக் கொள்க.

இவ்வார்த்தைப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்கிற அழகு காண்மின், – கீழ், ஸம்ஸாரிகளுக்கில்லாத்து தமக்குண்டானவாறே நெஞ்சு பகவத்விஷயத்திலே மண்டிற்றென்று கொண்டாடினார், விஷயத்தைப் பார்த்தவாறே அடியிட்டிலராயிருந்தார்.“ என்று.

 

English Translation

Even if the lord to difficult to contemplate by mind, go on speaking about his glories. The lord appears instantly in the heart and remains there.  How then will thought not remain steadfastly on him

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top