(2335)

(2335)

தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா

மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது

மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,

பெண்ணகலம் காதல் பெரிது.

 

பதவுரை

சகடம்

சகடாஸுரனை

தாளால்

திருவடியாலே

உதைத்து

உதைத் தொழித்தவனாயும்

பகடு

(குவலயாபீட மென்கிற) யானையை

உந்தி

உதைத்துத் தள்ளினவனாயும்

மருது இடைபோய்

மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று

சீனா

(அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும்

கேழல் ஆய்

வராஹரூபியாய்க் கொண்டு

மீளாது

காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று

அகலம் மண்கீண்ட

அகன்ற பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்தவனாயும்

ஓர் மாது உகந்த மார்வற்கு

ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பியிருக்கின்ற திருமார்பையுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு

பெண் அகலம்

பூமிப்பிராட்டியினுடைய திருமேனியில்

காதல்

ஆசையானது

பெரிது

 

கரை புரண்டிருப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நமக்கெல்லாம் சோறு, தண்ணீர், வெற்றிலைப்பாக்கு மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம் என்னுமிப்பொருள்களே உகப்புக்கு விஷயமாதலால் நம்முடைய வாய்வெகுவுதலும் போதுபோக்கும் இப்பொருள்களிலே மாறிமாறி நடந்து கொண்டிருக்கும், இங்ஙனன்றியே 1. “கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான், பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் – சீர்கலந்த, சொல்நினைந்து, போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை, என்னிணைந்து போக்குவர் இப்போது“ என்கிறபடியே பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றால் போதுபோக்கறியாத ஆழ்வார்கள் மாறிமாறி பகவத்குண சேஷ்டிதங்களைப் பேசுமத்தனையல்லது வேறு எதனைப் பேசுவர்கள்? உலகளந்த சரித்திரத்தை உரைப்பது, வடதளசாயியின் வ்ருத்தாந்தத்தை வாய்வெருவுவது, கண்ணபிரான் கதைகளைக் கூறுவது, இராமபிரான் சரிதைகளை இயம்புவது, மீண்டும் இவற்றையே வகைவகையாகப் பேசுவதாய்க் கொண்டு இவர்கள் போதுபோக்கு மழகை நாம் என்சொல்லவல்லோம் வாய் கொண்டு?

ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தப்பெற்று (யசோதையும் யமுனை நீராடப்போய்) இருந்த காலத்து, கம்ஸனா லேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல்விழுந்து தன்னைக்கொல்ல முயன்றதை அறிந்த தான் பாலுக்கு அழுகிய பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்து அச்சகடத்தைச் சின்ன பின்னமாக்கினான். கம்ஸனாலழைக்கப்பட்டு அவனது அரண்மனையினுட் புகும்போது சீறிவந்த குவலயாபீட மென்னும் மதயானையை மோதி மருதப்பொசித்தான். இரட்டை மருத மரங்கிளினிடையே தவழ்ந்துசென்று அவற்றைக்கீண்டு தள்ளினான், வராஹரூபியாய்த் திருவ்வதரித்து பூமிப் பிராட்டியை ஹீநஸ்திதியிலிருந்து உத்தரிப்பித்து மார்பாரப் புல்கி உவந்தான் – என்று சில பகவத்கதைகளைப் பேசி மகிழ்கிறார்.

பெண்ணகலம் காதல் பெரிது –கீழ் மூன்றாமடிக்குச் சேர ‘பூமிப் பிராட்டியினிடத்தில் கரைபுரண்ட காதலுடையவனதலால் * மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாய்ப் பிறந்து படாதன்பட்டான்‘ என்று கருத்துக் கொள்ளலாம். அன்றியே, ‘எம்பெருமானுக்குப் பெரிய பிராட்டியாரிடத்தில் பெரிதான காதல் உள்ளது, அவள் நமக்குப் புருஷகார பூதையாகையாலே நமக்கொரு குறையில்லை‘ என்பதாகவுங் கருத்துக்கொள்ளலாம்.

கீளா –செய்யா என்னும் வாய்பாட்டுடன் பாட்டிறந்தகால வினையெச்சம், கீண்டு என்றபடி.

பெண்ணகலம் – பெண்ணிடத்தில் என்றுமாம்.

 

English Translation

With his tender feet he destroyed a cart, an elephant, and two Marudu trees. He came as a boar and valiantly lifted the Earth on his tusk tooth.  The lotus dame Lakshmi resides on his chest.  His love for Dame Earth too, is strong.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top