(2326)

(2326)

புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,

திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு

முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்

மண்கோட்டுக் கொண்டான் மலை.

 

பதவுரை

மதம் வேழம்

மத்த கஜமானது

மா பிடியோடு

சிறந்த தன்பேடையோடு

புரிந்து

கலவிசெய்து

ஊடி

பிரணய கலஹம்பண்ணி

திரிந்து

(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து

சினத்தால் பொருது வெண்கோடு

கோபத்தினால் கரைபொருது வெளுத்த கொம்புகளினின்று

விரிந்த சீர் முத்து

சிறந்த முத்துக்களை

உதிர்க்கும்

வெளிவிடப்பெற்ற

வேங்கடமே

திருமலையே

மேல் ஒருநாள்

முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்)

மண்

பூமியை

கோடு

கோரப்பல்லின்மீது

கொண்டான்

எடுத்துக்கொண்டுவந்த பெருமானுடைய

மலை

திருமலையாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏழுலகும் தனிக்கோ செல்லப் பரமபதத்தில் வீற்றிருக்க கடவனான அவன் நம்போன்றவர்க்கும் ஆச்ரயிக்க எளியனாய்த் திருமலையிலே வந்து நித்யஸந்நிதி பண்ணியிராநின்றானென்கிறார். திருமலையை வருணிக்கிறார். யானை தன் பேடையுடன் கலந்திருந்தபோது பிரணயகலஹம் உண்டாயிற்று அதனால் பேடையை விட்டிட்டு இங்குமங்குந்திரிந்து கோபத்திற்குப் போக்கு வீடாகத் தனது தர்தத்தை மணிப்பாறைகளிலே யிட்டுக் குத்துகின்றதாம், அப்போது அத்தந்தத்தில் நின்று வெண்முத்துக்கள் உதிர்கின்றனவாம், இப்படி இருக்கப்பெற்ற திருமலைமுன்பு வராஹாவதாரஞ் செய்தருளின பெருமானுடைய இருப்பிடம் என்கை.

பொருது – திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக்கண்டு எதிர் யானையென்று பிரமித்து அதனோடே போர்செய்கின்றதாகவுங் கொள்ளலாம்.

 

English Translation

The Lord who came in the yore as a wild boar and lifted the Earth on his tusk teeth resides in venkatam, where the elephant bull in rut pairs with its cow and separates, the rams angrily and pierces its tusk into the Earth, spilling pearls.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top