(2191)

(2191)

பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து

காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய

நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்

காவடியேன் பட்ட கடை.

 

பதவுரை

காவலனே

ஸர்வரக்ஷகனே!,

பிள்ளைஆய்

சிறு குழந்தையாயிருந்து

மா சகடம்

(அஸுராவேசமுள்ள) பெரிய வொருவண்டியை

பர்த்தனை

கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;

மண்

பூமியை

இரந்து

(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று

(திருவடியாலே குளிரத்தடவி)

பல் உயிரும்

எல்லா ஆத்மாக்களையும்

காத்தனை

ரக்ஷித்தருளினாய்;

நின்

(இப்படி ரக்ஷகனான) உன்னை

உள்ளி நின்றமையால்

(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்

ஏத்திய நா உடையேன்

உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;

பூ உடையேன்

(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;

(ஆனபின்பு)

அடியேன்

உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்

பட்ட

வெகுகாலமாக அடைந்துள்ள

கடை

தாழ்வுகளை

கா

போக்கியருள வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலாழ்வார்களுகுப் பெரும்பாலும் எம்பெருமானுடைய விபவாவதாரங்களுள் க்ருஷ்ணாவதாமும் த்ரிவிக்ரமாவதாரமும், அர்ச்சாவதாரங்களுள் திருவேங்கடமலையும் அடிக்கடி வாய்வெருவும்படியா யிருக்குமென்பது குறிக்கொள்ளத்தக்கது.

பிள்ளையாய் மாசகடம் பேர்த்தனை = ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தப்பெற்று (யசோதையும் யமுனை நீராடப்போய்) இருந்தகாலத்து, கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதை யறிந்த பகவானான தான் பாலுக்கு அழுகிற பாவனையில் தன் சிறிய திருவடிகளை  மேலே தூக்கியுதைத்து அச்சகடத்தைச் சிந்நபிந்தமாக்கின வரலாறு அறிக.

பிரானே! யசோதைப்பிராட்டியைப் போல உன்னிடத்து எனக்கு அதிகமான ப்ரேமம் இல்லாவிட்டாலும் ‘ஆச்ரயிக்கத்தக்கவன் நீதான்’ என்கிற எண்ணத்தைப் பெற்று உன்னை ஆச்ரயிப்பதற்கு உரிய ஸாமக்ரிகளைப் பரிபூர்ணமாகக் கொண்டிருக்கிற நான் இனி உன்னருளுக்கு இலக்காகக் கூடியவன்; இதுவரையில் எனக்கு நேர்ந்திருந்த தேவதாந்தரபஜனம், உபாயாந்தரப்பற்று, ப்ரயோஜநாந்தர விருப்பம் முதலிய பொல்லாங்குகளைத் தவிர்த்து இனி யென்னைக் காத்தருளவேணும் என்றாராயிற்று.

பேர்த்தனை, காத்தனை – முன்னிலையொருமை இறந்தகால வினைமுற்றுக்கள்.  ‘ஏத்திய’ என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் காலமுணர்த்தாது தன்மையுணர்த்திற்று. கா – வினைமுற்று.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top