(2109)
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
தைய மலர்மகள்நின் னாகத்தாள், – செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத் திறை.
பதவுரை
|
கார் வண்ணத்து ஐய |
– |
மேகம்போன்ற வடிவையுடைய பெருமானே |
|
வலம்புரியும் |
– |
வலம்புரிச்சங்கமும் |
|
நேமியும் |
– |
சக்கரமும் |
|
கைய |
– |
என் கையிலுள்ளன; |
|
மலர் மகள் |
– |
பெரியபிராட்டியார் |
|
நின் ஆகத்தால் |
– |
உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்; |
|
செய்ய மறையான் |
– |
சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான் |
|
நின் உந்தியான் |
– |
உனது உந்திக்கமலத்திலுள்ளான்; |
|
மா மதிள் மூன்று எய்த இறையான் |
– |
பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான் |
|
நின் ஆகத்து இறை |
– |
உனது திருமேனியின் ஏகதேசம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவேங்கடமுடையானை நோக்கி உனது திருமேனியிலே அழகும் ஐச்வரியமும் சீலம் முதலிய குணங்களும் நிழலிட்டுத் தோற்றுகின்றனவே! என்று ஈடுபடுகிறார். சங்கும் சக்கரமும் திருக்கைகளிலே உள்ளன என்றதனாலும் மலர்மகள் நின்னாகத்தாள் என்றதனாலும் ஈச்வரத்வம் சொல்லப்பட்டது; ‘கார்வண்ணத்துஐய!’ என்ற விளியினால் அழகு அறிவிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் முதன்மையுண்டாகுமாறு திருநாபியிலும் திருமேனியின் வலப்பக்கத்திலும் இடம் கொடுத்திருப்பதைக் கூறுகின்ற பின்னடிகளால் சிலகுணம் தெரிவிக்கப்பட்டது.
கைய=கைகளிலேயுள்ளன; ‘கையது’ என்பதன் பன்மை. வலம்புரி- வலப்பக்கத்தால் சுழிந்திருப்பது. (இதற்கு எதிர்- இடம்புரி.)
சக்கரத்தின் விளிம்பைச் சொல்லுகிற நேமி என்னும் வடசொல் தமிழில் சக்கரத்துக்கும் பேராக வழங்கும். ஐய!- அண்மைவிளி . மலர்மகள் நின்ஆகத்தாள்=” அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பன்” திருவேங்கடமுடையானிறே. பிரமன் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஓதிக்கொண்டிருப்பதனாலும்,= வேதங்களே எனக்குச் சிறந்த கண்; வேதங்களே எனக்குச் சிறந்த செல்வம்” என்று சொல்லுவனாதலாலும் செய்ய மறையானெனப்பட்டான்.
இறையான்= ஈச்வரனாகத் தன்னை அபிமானித்திருக்கிற ருத்ரன் என்கை. நின்ஆகத்து இறை= ‘இறை’ என்பதற்குப் பல பொருளுண்டு; உனது திருமேனியிலே சிவன் அற்ப பாகமாக அமைந்திருக்கிறானென்றவாரு. திருவாய்மொழியில் “ ஏறாலுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளுந்தனியுடம்பன்” [4-8-1] என்ற பாட்டின் இருபத்தினாலாயிரப்படி வியாக்கியானத்தில்- ‘தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ: நிவாஸ: பரிகல்பித:” என்றெடுத்துக் காட்டப்பட்டுள்ள பிரமாண வசனம் இங்கு அநுஸந்திக்கத்தகும். [இதன்பொருள் பரமசிவன் தவம்புரிந்ததனால் திருவுள்ளமுவந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தனது வலப்பக்கத்திலே அவனுக்கு இடம் கற்பித்துத்தந்தருளினனென்பதாம்.]
English Translation
Your hands, -O cloud-hued Lord! -wield the conch and discus. The lotus-dame Lakshmi resides on your chest. Brahma resides on your lotus-navel, and occupying a small portion of your frame is the three-city destroyer, Siva-lord.
