(207)

(207)

போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்

ஏதேனும் சொல்லி அசல கத்தார்ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்

கோது கலமுடைக் குட்ட னேயா குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா

வேதப் பொருளே என்வேங்கடவா வித்தக னேஇங்கே போத ராயே.

பதவுரை

கோதுகலம் உடை

(எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன்மேல்) உடைய
ஓ குட்டனே

வாராய் பிள்ளாய்!
குன்று

(கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்

(குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா

குடக் கூத்தாடினவனே!
வேதம்

வேதங்களுக்கு
பொருளே

பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா

‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே

வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே

என்னருகில்
போத கண்டாய் போதர் கண்டாய்

விரைந்து ஓடிவா;

(என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன;

போதரேன் என்னாதே

‘வரமாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர கண்டாய்

(இசைந்து) வருவாயாக;

(என்று யசோதை வேண்டியழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தியழைப்பது ஏதுக்காக?’ என்ன 😉

அசல் அகத்தார்

அசல் வீட்டுக்காரர்கள்
ஏதேனும்

இன்னது என்று எடுத்துக்கூற ஒண்ணாபடியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி

(உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக்கொண்டு

(அவ்வளவோடும் நில்லாமல்)

ஏதேனும்

(என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச

(என் பக்கலிலே வந்து) சொல்ல

(அவற்றை)

நான்

(உன்மீது பரிவுள்ள)  நான்
கேட்க மாட்டேன்

கேட்டுப் பொறுக்க மாட்டேன்

(ஆதலால்,)

இங்கே போதராய்

(அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்- என்று கீழ்ப்பாட்டில் வேண்டினபடிக் கிணங்க அவள் தன் மகனை யழைக்கின்றாள்.  ‘கோதரு’ என்கிறவிது போதர் என்று குறைந்து கிடக்கிறது; ‘போ’ என்னும் வினைப்பகுதி ‘தா’ என்னுந் துணைவினையைக் கொள்ளும்போது வருதல் என்ற பொருளைக் காட்டுமென்பர்: ‘போதந்து’ என்கிறவிது ‘போந்து’ என மருவி, ‘வந்து’ என்னும் பொருளைத்தருதல் அறிக.  கோதுகலம் – ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம்.  இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய், எல்லாராலும் விரும்பத்தக்க (குணங்களையுடைய)வனே! என்று கருத்தாம்.  இப்படி அனைவராலுங் கொண்டாடத் தக்கவனாயிருந்து வைத்து இன்று எல்லாராலும் பழிக்கப்படுவதே! என்றிரங்கி ஓ! என்கிறாள்.  குடமாடு கூத்தா – குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்றபடி: குடக்கூத்தின் வகையைக் “குடங்களெடுத்தேறவிட்டு!- என்ற பாட்டின் உரையில் காண்க.  வேதப்பொருள் – வேதங்களாற் புகழ்ந்து கூறப்படுபவனென்று கருத்து.

English Translation

“O Celebrated little one, O Pot-dancer, O Substance of the Vedas! My Lord of Venkatam, Wonder-Lord! You held a mount against a hailstorm. Come here now, do not say you won’t. When the neighbours say something and speak something else, I will not bear it. Come here right now!”

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top