(1353)

(1353)

மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,

மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம்,

மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட,

புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே.

 

பதவுரை

மின்னின் அன்ன நுண் மருங்குல்

மின்னலோடு ஒத்த நுட்பமான இடையை யுடையவளும்

வேய் ஏய் தட தோள்

மூங்கில் போன்று பருத்த தோள்களை யுடையவளுமான

மெல்லியற்கா

இளம்பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டிக்காக

அன்று

முன்பொரு காலத்தில்

மன்னு சினந்த ஏழ் மழ விடைகள்

மாறாத கோபத்தையுடைய ஏழு இளங்காளைகளை

அடர்த்த மாலது இடம்

வென்றொழித்த பெருமானுடைய இருப்பிடமாவது;

மன்னு முது நீர்

ஒருநாறும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள

அரவிந்தம் மலர் மேல்

தாமரைப் பூக்களிலே

வரி வண்டு இசை பாட

வரிவண்டுகள் இசைபாடப் பெற்றதும்,

புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்

புன்னை மரங்கள் பொன்னிறமான தாதுகளை உதிர்க்கப்பெற்றதுமான

புள்ளம் பூதங்குடி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியின் வியக்கியானத்திலே கருமாரி பாய்ந்தும் அணைய வேண்டுமாய்த்து (நப்பின்னைப் பிராட்டியின்) வடிவழகுஎன்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தியுள்ளது:

கருமாரி பாய்தலென்பது, கச்சிமாநகரில் காமாட்சியம்மன் ஆலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களினிடையே குதித்தலாம்.  பண்டைக்காலத்தில் ஏதேனும் இஷ்டஸித்திபெற வேண்டுவார் இவ்வருந்தொழில் செய்வது வழக்கமாம்: குடல் கிழிந்து சாகவேண்டும்படியான இவ்வருந்தொழிலை வெகு சாதுரியமாகச் செய்து அயாபமொன்றுமின்றியே உயிர் தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர்.  மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்கள் என்றால் இதனால் அவர்கள் பெற விரும்பிய வஸ்து மிகச் சிறந்ததென்பது விளங்குமன்றோ. அப்படியே, நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்தது இவ்வாக்கியமென்க.  கருமாறி யென்றும் சொல்லுவர்; கர்ப்பத்தைக் கிழிப்பதென்றபடி.

***- புன்னை பொன்னேய்தாதுதிர்க்கும் = திருச்சந்த விருத்தத்தில் கரண்டமாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பாழம், புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய்என்றருளிச் செய்திருப்பதை அடியொற்றி அவ்விடத்துக் குளக்கரையில் இற்றைக்கும் ஒரு பனைமரம் வளர்க்கப்பட்டுவருதல் போல இங்கும் புன்னை பொன்னேய்தா துதிர்க்கும்என்ற ஆழ்வார் திருவாக்கைப் பேணித் திருப்புள்ளம்பூதங்குடி ஸந்நிதியில் இற்றைக்கும் ஒரு திருப்புன்னை மரம் வளர்க்கப்பட்டுவருதல் அறியத்தக்கது.

 

English Translation

For the pleasure of embracing the Bamboo-like arms of the lightning-thin-waisted Nappinnai, the adorable Lord subdued seven angry young bulls.  He resides,-where lotus blossoms in eternally wet water tanks, on which gold-lined dark bumble bees drink nectar and sing, while punnai trees sprinkle golden turmeric-like pollen, -in Pullam-Budangudi, yes always!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top