(1090)
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.
பதவுரை
|
உலகு உய்ய |
– |
(ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களாலே) உலகங்கள் வாழ்வதற்காக (ஸ்ரீமந்நாராயண னொருவனே மூன்று வடிவுகொண்டு காரியஞ் செய்கையாலே) |
|
உடம்பு உருவில் |
– |
சரீ ரசரீரிபாவத்தையிட்டுப் பார்க்குமளவில் |
|
மூன்று ஒன்று ஆய் |
– |
மூன்று தத்துவமும் ஒருபடியாய் |
|
மூர்த்தி வேறு ஆய்நின்றானை |
– |
(உண்மையில்) ஸவ்ரூபம் வேறுபட்டு நிற்குமவனும் |
|
அன்று |
– |
கண்ணனாகப் பிறந்த அக்காலத்து |
|
பேய்ச்சி |
– |
பூதனையினுடைய |
|
விடம் |
– |
(முலையில் தடவியிருந்த) விஷத்தை |
|
பருகு |
– |
பானம்பண்ணின |
|
வித்தகனை |
– |
ஆச்சரீயபூதனும் |
|
கன்று மேய்த்து விளையாட வல்லானை |
– |
கன்றுகளை மேய்த்து விளையாடுகைக்காக வந்து பிறந்தவனும் |
|
வரை மீ கானில் |
– |
மலைமேலுள்ள காடுகளிலே |
|
தடம் |
– |
தடாகங்களிலே |
|
பருகு |
– |
(கன்றுகளுக்கு நீர் குடிக்கும் விதத்தைப் பயிற்றுவிக்கைக்காகத் தான் இறங்கிக் கையை முதுகிலே கட்டிக் கொண்டு) தண்ணீர் குடித்தவனும் |
|
கரு முகிலை |
– |
காளமேகம் போன்றவனும் |
|
தஞ்சை கோயில் |
– |
தஞ்சை மாமணிக்கோயிலிலே |
|
தவம் நெறிக்கு ஓர் பெரு நெறியை |
– |
தன்னைக் கிட்டுகைக்கான உபாயங்களிலே சிறந்த உபாயம் தானாக நிற்பவனும் |
|
வையம் காக்கும் |
– |
உலகத்தைக் காப்பதற்காக |
|
கடு பரி மேல் கற்கியை |
– |
கடுநடையுடைய குதிரையின் மேலே கல்கியவதாரம் செய்யப்போகிறவனுமான எம்பெருமானை |
|
கடி பொழில் சூழ் கடல் மல்லை தல சயனத்தே |
– |
மணம்மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கடன் மல்லையிலே |
|
நான் கண்டுகொண்டேன்.. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
“பிரமன் சிவன் இந்திரன் சந்திரன் முதலிய தெய்வங்களெல்லாம் நாராயணனே” என்று சாஸ்த்ரத்திற் பலவிடங்களிற் சொல்லப்பட்டுள்ளது; அவ்விடங்களை எப்படி நிர்வஹிக்க வேணுமென்றால்; ‘பிரமன் முதலிய தெய்வங்களைச் சரீரமாகக் கொண்ட ஸர்வ சரீரியான ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே’ என்று சொல்லிற்றாக நிர்வஹிக்கவேணும்; தெய்வங்கள் பலபலவுள்ளவனாக எவ்விடங்களிற் சொல்லப்பட்டுள்ளதோ, அவ்விடங்களில், ஸர்வசரீரியான ஸ்ரீமந்நாராயணனிற்காட்டில் சரீரங்களான தெய்வங்களுக்கு உள்ள ஸ்வரூபபேதம் சொல்லப்படுவதாக நிர்வஹிக்கவேணும்- என்கிற இந்த அர்த்தம் இப்பாட்டில் முதலடியாற் காட்டப்பட்டதாகக் கொள்க.
பிரமன் சிவன் முதலிய தெய்வங்களைத் தனிப்படவும் நிறுத்தினது ஏதுக்காகவென்னில், ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் முதலிய சில லோகயாபாரங்கள் நடை பெறுவதற்காக வென்பார் “உலகுய்ய என்கிறார்.
“வரைமீகானில் தடம்பருகு கருமுகிலை” என்பதற்கு நஞ்சீயர்பொருள் சொல்லும்போது வேறொரு விதமாகச் சொல்லா நிற்க, அதைக்கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையழகியமணவாளப் பெருமாளரையர் “இவ்விடத்திற்கு பட்ட ரருளிச்செய்யும் பொருள் இப்படியன்றே” யென்று சொல்லி, பட்டரருளிச் செய்யும் விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்; அதாவது – மலைமேல் காட்டிலேயுண்டான தடாகங்களில் கன்றுகள் தண்ணீர் குடிக்கப் புகுந்தால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னே யிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்; அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக்கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீரமுதுசெய்து காட்டுவன்; அதைச் சொல்லுகிறது “வரைமீகானில்தடம்பருகு” என்று.
தவநெறிக்கு ஓர் பெருநெறியை ஸ்ரீ எம்பெருமானைப் பெறுவதற்குக் கருமயோகம், ஞானயோகம்; பக்தியோகம் முதலிய உபாயங்கள் பல விதிக்கப்பட்டிருந்தாலும், ஆனையின்மேல் ஏறநினைப்பார்க்கு ஆனையின் காலைப்பற்றியே ஏற வேண்டுவதுபோல் எம்பெருமானது திருவடிகளைப் பற்றியே அவனைப் பெறுதல் சிறக்குமென்றும் அவனே ஸித்தோபாயமென்றும் பரமைகாந்திஸித்தாந்தமாயிருத்தலால், எல்லாவுபாயங்களினுள்ளும் சீரிய உபாயம் தானே யாயிருப்பவனெனப்பட்டது.
தருமங்கள் முற்றும் குன்றி அதருமங்கள் அதிகரித்துக் கலிமுற்றுங் காலத்தில் எம்பெருமான் குதிரையின் மீதேறி வந்து கல்கி யென்னுந் திருநாம முடையனாய் துஷ்டர்களைத் தொலைத்து மண்ணின் பாரம் நீக்குவானென்று நூற்கொள்கையுள்ளதனால் “கடும்பரிமேல் கற்கியை” என்கிறார்; இது பவிஷ்யதவதாரம்.
English Translation
To protect the three worlds, he takes these forms and remains apart from them. In the yore, he sucked the ogress putana’s poisoned breast. He played with calves, and grazed them in upland forest, teaching them to drink water from the lakes. He is the cloud hued one worshipped in Tanjai Maamanikkoil surrounded by groves. He will come as Kalki riding a horse to protect the world. Li have seen Him in Talasayanam at Kadal Mallai.
