(1549)

(1549)

வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,

துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,

அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,

பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே.

 

பதவுரை

வற்றா முத நீரொடு

ஒருகாலும் வடியாத கடல்களையும்

மால்வரை ஏழும்

பெரிய குலபர்வதங்களேழையும்

முன்

முன்பொருகால்

துற்று ஆக துற்றிய

ஒரு கபளமாக வாரி விழுங்கின

தொல் புகழோனே

சாச்வதமான கீர்த்தியையுடையவனே!

அற்றேன் அடியேன்

உனக்கே உரியேனாய்த தீர்ந்திருக்கிற அடியேன்

உன்னையே அழைக்கின்றேன்

உன்னையே சொல்லிக் கூப்பிடுகின்றேன்;

பெற்றேன்

இப்படி உன்னையே அழைக்கும்படியான பாக்யத்தைப் பெற்றேன்;

என் எந்தை பிரானே!- ;

 

அருள் தந்திடு கிருபைசெய்தருளவேணும்.


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “மறவாதடியே னுன்னையே அழைக்கின்றேன்” என்றதும் மிகையன்றோ; பிரளய காலத்தில் உலகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்துக் காத்தருளினாயே, அப்போது ஆரேனும் கூப்பிட்டோ காத்தருளிற்று? பிரஜைகளின் நோயையறிந்து பரிஹரிக்கும் மாதாவைப்போலே நீயே முற்பட்டன்றோ காத்தது. அப்படி உன்பேறாகக் காத்தருள வேண்டியிருந்தும், நானும் உன்னை நோக்கிக் கூப்பாடு போடுவதைக் கண்டாகிலும் இரங்கியருளலாகாதோ? என்கிறார்.

துற்று – கபளம்.  இத்தனை பிரபஞ்சங்களையும் ஒரே கவளமாக உட்கொண்ட னென்கை.  “அண்டமெலா முண்டையென்ப ரறியாதார் ஆங்கவை நீ, உண்டருளுங் காலத்தில் ஒரு துற்றுக்கு ஆற்றாவால்” என்றார் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில்.  உண்ட உலகமெல்லாம் ஒரு கவளத்துக்கும் போதவில்லையாம்.  தொல்புகழோனே! =  இப்படியே பலகாலும் ஆச்ரித ரக்ஷணம் பண்ணிப் பண்ணிப் படைத்த புகழ் எல்லையற்ற தென்கை.  அற்றேன் – வேறொருவர்க்கும் உரியேனாகாதபடி உனக்கே அற்றுத் தீர்ந்தவன் என்றபடி.


English Translation

 

O Lord who swallowed the seven oceans, mountains and all else in one gulp, O First-cause Lord!  Relentlessly I call you alone, pray grace me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top