(3759)
கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா.
(3760)
அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே.
(3761)
புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே.
(3762)
ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர்,
சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே.
(3763)
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.
(3764)
திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
அருளால் திருவருள் அவன் சென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழுத்தது மெல்லியல் செவ்விதழே.
(3765)
மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே.
(3766)
மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே.
(3767)
பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே.
(3768)
அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே.
(3769)
நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே.
