(2412)
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.
(2413)
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, – வதைப்
பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி.
(2414)
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு – வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு.
(2415)
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.
(2416)
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
(2417)
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.
(2418)
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், – மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு.
(2419)
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன், உகைக்கு மேல்,
எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,
அப்போது ஒழியும் – அழைப்பு.
(2420)
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.
(2421)
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
