(2472)
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் – அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று.
(2473)
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை – என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு.
(2474)
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், – ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
(2475)
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று.
(2476)
ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை
இடநாடு காண இனி.
(2477)
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.
