(3605)
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
(3606)
நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?
(3607)
கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,
சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே?
(3608)
தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,
நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே?
(3609)
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ,
ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை,
தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே?
(3610)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே?
(3611)
கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ,
வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல,
கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே?
(3612)
செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,
எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,
அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,
மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே?
(3613)
மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே?
(3614)
வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்
சேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே?
(3615)
தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,
தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.
