(3594)
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே.
(3595)
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே.
(3596)
நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.
(3597)
நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
கோளு மெழேரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே.
(3598)
ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.
(3599)
போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.
(3600)
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே.
(3601)
நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணந்திண் டோள்கொண்ட அன்றே.
(3602)
அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே.
(3603)
மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.
(3604)
குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.
