நான்காந் திருமொழி
(1982)
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை என்ன அரணாவ னென்னு மருளால்
அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவா திறைஞ்சென் மனனே.
(1983)
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன்மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.
(1984)
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் உம்ப ருலகேழி னோடு முடனே,
மாதிர மண்சு மந்து வடகுன்று நின்ற மலையாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,
ஆதிமுன் ஏன மாகி அரணாய மூர்த்தி அதுனம்மை யாளு மரசே.
(1985)
தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்க ளவிழ,
வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன தாகம் மதியாது சென்றொ ருகிரால்
பிளவெழ விட்ட குட்ட மதுவைய மூடு பெருநீரில் மும்மை பெரிதே.
(1986)
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வைய முடிமூன் றிரந்து பெறினும்,
மந்திர மீது போகி மதிநின்றி றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர்,
அந்தர மேழி னூடு செலவுய்த்த பாதம் அதுநம்மை யாளு மரசே.
(1987)
இருநில மன்னர் தம்மை யிருநாலும் எட்டு மொருநாலு மொன்று முடனே,
செருநுத லூடு போகி யவராவி மங்க மழுவாளில் வென்ற திறலோன்,
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே.
(1988)
இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் என்ன இனமாய மான்பின் எழில்சேர்
அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப தற்கொ ருருவாய மானை யாமையா,
கொலைமலி யெய்து வித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்,
சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமால் நமக்கொ ரரணே.
(1989)
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி யுண்ண முதலோடு வீடு மறியாது,
என்னிது வந்த தென்ன இமையோர் திகைப்ப எழில்வேத மின்றி மறைய,
பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும் நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ,
அன்னம தாயி ருந்தங் கறநூல் உரைத்த அதுநம்மை யாளு மரசே.
(1990)
துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உணமுலை முங்கொடுத்த வுரவோள தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி,
பணமுலை யாயர் மாத ருரலோடு கட்ட அதனோடு மோடி அடல்சேர்,
இணைமரு திற்று வீழ நடைகற்ற தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே.
(1991)
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே.
