இரண்டாந் திருமொழி
(1962)
குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ.
(1963)
பூங்கு ருந்தொசித்து ஆனை காய்ந்தரி மாச்செகுத்து,
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டுவன் பேய்முலை
வாங்கி யுண்ட,அவ் வாயன் நிற்கஇவ் வாயன்வாய்,
ஏங்கு வேய்ங்குழல் என்னோ டாடும் இளமையே.
(1964)
மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்,
அல்லி மலர்த்தண் டுழாய்நி னைந்திருந் தேனையே,
எல்லி யின்மா ருதம்வந் தடுமது வன்றியும்,
கொல்லைவல் லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே.
(1965)
பொருந்து மாமர மேழு செய்த புனிதனார்
திருந்து சேவடி யென்ம னத்து நினைதொறும்,
கருந்தண் மாகடல் மங்கு லார்க்கும் அதுவன்றியும்,
வருந்த வாடை வருமி தற்கினி யென்செய்கேன்.
(1966)
அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல்,
பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே.
(1967)
ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே.
(1968)
காமன் றனக்கு முரையல் லேன்கடல் வண்ணனார்,
மாமண வாள ரெனக்குத் தானும் மகன்சொல்லில்,
யாமங்கள் தோறெரி வீசு மென்னிளங் கொங்கைகள்,
மாமணி வண்ணர் திறத்த வாய்வளர் கின்றவே.
(1969)
மன்சுறு மாலிருஞ் சோலை நின்ற மணாளனார்,
நெஞ்சம் நிறைகொண்டு போயி னார்நினை கின்றிலர்,
வெஞ்சுடர் போய்விடி யாமல் எவ்விடம் புக்கதோ,
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கினி நல்லதே.
(1970)
காமன் கணைக்கோ ரிலக்க மாய்நலத் தில்மிகு,
பூமரு கோலநம் பெண்மை சிந்தித்தி ராதுபோய்
தூமலர் நீர்கொடு தோழி நாம்தொழு தேத்தினால்
கார்முகில் வண்ணரைக் கண்க ளால்காண லாங்கொலோ.
(1971)
வென்றி விடையுட னேழ டர்த்த அடிகளை,
மன்றில் மலிபுகழ் மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதுமு ரைப்பவர் தங்கள்மேல்
என்றும் நில்லாவினை யொன்றும் சொல்லி லுலகிலே.
