ஐந்தாந் திருமொழி
(1188)
வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே.
(1189)
நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவணை
வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து, எங்கும்
ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே.
(1190)
நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது,
இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்,
செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே.
(1191)
மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே.
(1192)
நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும், என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,
பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து, எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே.
(1193)
கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி கைதொழுதெழும்,
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்,
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே.
(1194)
உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம்புகுந்த,அப்
புலவ! புண்ணியனே! புகுந்தாயைப் போகலொட்டேன்,
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே.
(1195)
சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே.
(1196)
ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள்
வேதியர்! அரையா உரையாய் ஒருமாற்றமெந்தாய்!
நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க்
காதியாய் இருந்தாய்! அணியாலி யம்மானே.
(1197)
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே.
