இரண்டாந் திருமொழி
(1158)
ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1159)
காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தை யுள்வைத்து மென்பீர்,
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1160)
வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய் விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த,
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1161)
அருமா நிலமன் றளப்பான் குறளாய் அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்!
கருமா கடலுள் கிடந்தா னுவந்து கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,
திருமால் திருமங் கையொடாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1162)
கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,
தாமங் கமருள் படைதொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1163)
நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் அருமா மறையந் தணர்சிந் தைபுக,
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1164)
மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1165)
மாவாயி னங்கம் மதியாது கீறி மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன் குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,
மூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1166)
செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,
அருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,
பெருநீர் நிவாவுந்தி முத்தங் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
(1167)
சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத் திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,
ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப அலைநீ ருலகுக் கருளே புரியும்,
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்,
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப் பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே.
