இரண்டாந் திருமொழி
(1658)
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ,
கைவளை கொள்வது தக்கதே?
(1659)
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,
பாணனார் திண்ண மிருக்க இனியிவள்
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே.
(1660)
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள்இது வென்கொலோ.
(1661)
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ.
(1662)
கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,
வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,
வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே.
(1663)
வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்,
மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்
கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே.
(1664)
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்
அரங்கமே என்ப திவள்தனக் காசையே.
(1665)
தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா
கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்
வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்
கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?
(1666)
முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,
தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே?
(1667)
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே.