(3745)

(3745)

வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,

வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்

வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,

வயிற்றிற்கொண்டு மன்ன வைத் தேன்மதி யாலே.

 

பதவுரை

வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும்

தாயானவள் வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ரக்ஷகராகின்ற இந்நிலத்தரசர்களையும்

யவரும்

அவர்களுக்கும் மேலான பிரமன் முதலானாரையும்

வயிற்றில் கொண்டு நின்று

தம்முடைய ஸ்வரூபைக தேசத்திலே கொண்டு நின்று

ஒரு மூ உலகும்

மூவுலகங்களையும்

தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை

தன்னுடைய வயிற்றிலே கொண்டு அநாயாஸமாக இருக்கின்ற திருமாலை

மதியாலே

அவர் தந்த அனுமதியாலே

வயிற்றில் கொண்டு

என்னுள்ளே கொண்டு

மன்ன வைத்தேன்

பேராதபடி வைத்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகரித்தமையைக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! ஒரு வ்யாஜமாத்ரமுமில்லாமல் எம்பெருமான் விஷயீகரிப்பனோ? ஏதேனுமொரு வ்யாஜ மிருக்குமே, அதைச் சொல்லிக்காணீர், என்று சிலர் கேட்பதாகக் கொண்டு, அவனுடைய விஷயீகாரத்தை விலக்காமையாகிற அனுமதிமாத்திரமே நான் பண்ணினது. இவ்வளவேயென்கிறாரிப்பாட்டில். “மன்னவைத்தேன் மதியாலே“ என்ற ஈற்றடி இப்பாட்டுக்கு உயிரானது. ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் (110) “மதியால் இசைந்தோமென்னும் அநுமதீச்சைகள் இருத்துவமென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது“ என்ற சூர்ணையின் பொருள் இங்கே அறியத்தக்கது.

முதலடியில் “வயிற்றில்கொண்டு நின்றொழிந்தாரும்“ என்பதனால் இந்நிலவுலகில் ரக்ஷகரென்று பேர்பெற்றுள்ள அரசர்கள் சொல்லப்படுகிறார்கள் எப்படி யென்னில், தாயானவள் ப்ரஜையை வயிற்றிலே வைத்து நோக்குமாபோலே ஜகத்தை நோக்குமவர்கள் என்னுங் காரணத்தினால். அதற்குமேல், யவரும் என்பதனால் அவர்களிற்காட்டிலும் மேம்பட்டவர்களான ப்ரஹ்மாதிகள் சொல்லப்படுகிறார்கள். இனி இரண்டாமடிக்குப் பொருள் இரண்டு வகையாகக் கொள்ளலாம், “வயிற்றில்  கொண்டு நின்று“ என்று பிரித்துத் திருமாவிடத்திலே அந்வயிப்பது ஒருவகை. அன்றியே, நின்ற ஒரு நின்றொரு என்று தொகுத்தல் விகாரமாகக் கொண்டு, முதலடியிலே சொன்ன க்ஷத்ரியாதிகளையும் ப்ரஹ்மாதிகளையும் தன்னுள்ளே கொண்டிருந்துள்ள மூவுலகையும் என்று கொள்ளுவது மற்றொருவகை.

ஆக இவ்வளவையும், தன்வயிற்றில் கொண்டு –தன்னுடைய ஸங்கல்பஸஹஸ்ரைக தேசத்தாலே நடத்திக்கொண்டு, (அல்லது) வயிற்றிலே கொண்டு. (நின்ற வண்ணம் நின்றமாலை) இவற்றையெல்லாம் தம் வயிற்றிலே கொண்ட விடத்திலும் ஒரு விகார மின்றிக்கே முன்புபோலே நின்ற ஸர்வேச்வரனை என்றபடி. (வயிற்றில் கொண்டு மன்னவைத்தேன்) விபூதி விசிஷ்டனான ஸர்வேச்வரனை என்னுடைய ஹ்ருதயத்திலே பேராதபடிவைத்தே னென்கை.

 

English Translation

The Lord who contains the three worlds and all beings and celestials stands as one, forever unchanging ,  I have him my heart forever!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top