(3744)

(3744)

அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,

வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,

சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்

நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே.

 

பதவுரை

மற்று அருள் அறியேன்

வேறொன்றையும் உபகாரமாக நினைத்தருக்கின்றிலேன்,

என்னை ஆளும் பிரானார்

என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவர்

செய்வார்கட்கு

தாம் அருள் செய்ய நினைத்தவர்கட்கு

வெறிதே

நிர்ஹேதுகமாகவே

உகந்து அருள் செய்வர்

திருவுள்ளமுகந்து க்ருபை பண்ணுவர்

மூ உலகும் நெறி ஆ

மூவுலகங்களையும் முறைதப்பாதபடி.

தம் வயிற்றில் கொண்டு

தமக்குள்ளே கூடக் கொண்டு

சிறியேனுடை சிந்தையுள் நின்றொழிந்தாரே

க்ஷுத்ரனான என்னெஞ்சிலே நின்று விட்டாரே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி தம்மிடத்திலே எம்பெருமான் நிர்ஹேதுகமாகச் செய்தருளின அருளையிட்டு நிர்ஹேதுகமாக அருள் செய்கையே அவனுக்கு இயல்பு என்று அவன்றன்படியை நிஷ்கர்ஷிக்கிறாரிப்பாட்டில். என்னையாளும் பிரானார் செய்வார்கட்கு வெறிதே யருள்செய்வர் – என்னையாளும் பிரானார்“ என்று எம்பெருமானுக்கு ஒரு திருநாமம் சாத்துகிறார்போலும். தம்மையடிமைகொள்ளுதலே அவனுக்கு நிரூபகமென்றிருக்கிறார். செய்வார்கட்கு என்றது –தாம் விஷயீகரிக்க நினைத்தார்க்கு என்றபடி. எந்தவ்யக்தியை விஷயீகரிக்கவேணுமென்று தாம் திருவுள்ளம் பற்றுகிறாரோ அந்த வ்யக்தியினிடத்தில் (வெளிதே) நிர்ஹேதுகமாகவே அருள் செய்வர்.

ஸ்ரீ வசநபூஷணம் நான்காம் பிரகரணத்தில் பகவந்நிற்ஹேதுகக்குருபாவைபவ நிருபண ஸ்தலத்தில் (393) “*வெறிதேயருள் செய்வரென்று இவ்வர்த்தத்தை ஸுபஷ்டமாக அருளிச் செய்தாரிறே, செய்வார்கட்கு“ என்று அருளுக்கு ஹேது ஸுக்ருதமென்னா நின்றதேயென்னில், அப்போது வெறிதே என்கிற விடம் சேராது“ என்றருளிச் செய்த சூர்ணைகள் இங்கே அநுஸந்தேயம். ஏதேனுமொரு நன்மையைச் செய்பவர்களுக்கு“ என்னும் பொருளை விவக்ஷித்து “செய்வார்கட்கு என்று ஆழ்வார் பிரயோகித்தாரல்லர், அப்படியாகில், வெறிதேயருள்செய்வர் என்றது பொருந்தாது என்க.

ஆழ்வார் இப்போது இந்த நிர்ஹேதுக்ருபாவைபவத்தை அருளிச் செய்வதானது, தம்மிடத்தில் எம்பெருமான் இப்போது நிர்ஹேதுகமாக வருள் செய்தானென்பதைத் தெரிவிக்கவேயாதலால் அது பின்னடிகளில் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி நிர்ஹேதுகமாகவருள எங்கே கண்டீ ரென்ன, வேறோரிடம் தேடிப்போக வேணுமோ? என் பக்கல் செய்தமைபாரீர், மிகவும் அற்பனான என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே அவன் பண்ணுமபிநிவேசம் ஒரு ஹேதுவைக் கொண்டோ வென்கிறார். “சிறியேனுடைச் சிந்தையுள் நின்றொழிந்தாரே“ என்று அந்வயம். த்ரிலோகாதிபதியான அவன் தம்முள்ளே நின்றொழிந்தால் உலகத்தையெல்லாம் நோக்கவேணுமேயென்ன, ஜகந்நிர்வாஹமும் என்னுள்ளே யாகிறது என்கிறார் மூவுலகுமித்யாதியால். கீழே “சிக்கனச் சிறிதோரிடமும் பயப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கிப் புகுந்தான்“ என்றருளிச் செய்தது இங்கே நினைக்கத்தக்கது.

 

English Translation

The Lord graces for nothing those whom he chooses.  A greater grace I do not know.  Containing the three worlds in himself, he has come to stay in my small heart

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top