(3302)

(3302)

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே,

நாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோறு மென்னுடைய,

ஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,

நீக்க மின்றி யெங்கும் நின்றாய் நின்னை யறிந்தறிந்தே.

 

பதவுரை

நாள் தோறும்

ஸர்வகாலத்திலும்

என்னுடைய

என்னுடைய

ஆக்கை உள்ளும்

சரீரத்தினுள்ளும்

ஆவி உள்ளும்

ஆத்மாவினுள்ளும்

அல் புறத்தின் உள்ளும்

மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும்

நீக்கம் இன்றி

நீங்காமல் (ஒன்றையும் விடாமல்)

எங்கும் நின்றாய்

எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே!

நின்னை

உன்னை

அறிந்து அறிந்தே

(அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும்

யான்

நான்

உன்னை காண்பான்

உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி

நோக்கி நோக்கி

எல்லாத் திசைகளிலும் பார்த்து

எனது ஆவி உள்ளே

எனது நெஞ்சுக்குள்ளே

நாக்கு நீள்வன்

நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்)

ஞானம் இல்லை

இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும் அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.

இறைப்பொழுதும் ஓயாதே எட்டி யெட்டிப் பார்க்கின்றேன்; எந்தத் திசை வழியாக வருவாயென்று தெரியாமையாலே நாற்புறமும் விழித்துப் பார்க்கிறேன்; எதற்காகவென்னில்; உன்னைக் காண்கைக்காகவத்தனை.  காண்பதற்கு மேலே வேறொரு ப்ரயோஜனத்தைக் கனவிலும் கருதாத குடியிலே யன்றோ பிறந்திருப்பது. ‘இப்படி எனக்கு ஆசை’ என்று வாய்விட்டுச் சொல்லமாட்டாதே நாக்கை நீட்டியிருக்கின்றேன்.  நாக்கை நீட்டுவானேன் என்னில்; “கன்னலங்கட்டி தன்னை; கனியை யின்னதமுதந் தன்னை” என்றும் எனக்குத்தேனே பாலே கன்னலே யமுதே” என்றும் “விழுமியமுனிவர் விழுங்குங் கோதிலின் கனியை” என்றும் சொல்லுகிறபடியே பகவத்விஷயமென்பது பரம போகய் வஸ்துவாகையாலே “துர்வமுதைப் பருகிப்பருகி” “அடியேன் வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே” என்கிற கணக்கிலே நாவுக்கும் விஷயமுண்டே.

நாக்கு நீட்டினவளவில் விரும்பின பொருள் கிடையாதொழிந்தவாறே ‘இதில் நாம் நசை வைப்பது தகுதியன்று’ என்று கைவாங்கி நிற்பதன்றோ ப்ராப்தம்.  அரிதென்னுமிடம் அறியாதே சிறு குழந்தைகள் நாக்கை நீட்டினபடியே யிருப்பதுண்டு; அதுபோலவே நானும் என்று காட்டுகிறார் ஞானமில்லை என்பதனால்.

ஞானமில்லை என்றதை உபபாதிக்கிறது மேலுள்ளதெல்லாம்.  என்னுடைய சரீரத்திலும் ஆத்மாவிலும் மற்றும் இந்த்ரியாதிகளிலும் ஒன்றையும் விடாதே எல்லா ஸ்தலத்திலும் வியாபித்து நின்றாய் நீ என்பதை அறியேனோ? இப்படிப்பட்ட நீ என் கண்ணுக்குத் தோற்ற வேணுமென்று திருவுள்ளம் பற்றியானாகில் உடனே தோற்றியிருக்கலாமே; “வாசி வல்லீர்” என்கிறபடியே இன்னாருக்குத்தான் தோற்றவேணும் இன்னாருக்குத் தோற்றலாகாது என்று ஒரு நிர்ப்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாயென்று நான் தெரிந்துகொண்டு வாய் மூடியிருக்கை  அழகியது.  அப்படியிருக்கின்றிலேனே; உன் கருத்தையறிந்து வைத்தும் ஆறியிருக்கின்றிலேனாகையாலே எனக்கு ஞானமில்லை யென்னுமிடம் ஸித்ததேயன்றோ என்றாராயிற்று.

ஞானமில்லை என்றதற்கு ஒரு உள்ளுறை பொருளுண்டு; மற்றையோருடைய ஞானம் போன்றதன்று என்னுடைய ஞானம்; “மயர்வற மதிநலமருளினன்” என்றபடி பக்திரூபாபன்ன ஜ்ஞானத்ததைத் தந்தருளினாயாகையாலே “அத்யந்த பக்தி யுக்தாநாப் ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:, என்ற கட்டளையிலே துடிக்கின்றேன் என்பதாம்.  “காற்றும் சுழியும் கட்டி அழக்கொண்ட பெருங் காதலுக்குப் பத்திமை நூல்வரம்பில்லையே” என்ற ஆசார்யஹ்ருதய திவ்யஸூக்தியும் இதற்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம்.

“நீக்கமன்றி யெங்கும் நின்றாய்” என்றவிடத்திலே நம்பிள்ளையீடு; -“கிழிச்சீரையிலே தனங்கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர்படி” என்று (அதாவது) உள்ளே நிதி கிடக்கச்செய்தேயும் சிலர்வெளியிலே செல்வம்பெற வேணுமென்று பாரிப்பர்; அதுபோலே ஆழ்வார் தம்மிடத்திலே அந்தர்யாமியாய்ப் பூர்ணனாயிருக்கின்ற பரம புருஷனை அநுபவித்து த்ருப்திபெறமாட்டாதே பாஹயாநுபவத்திலே மநோரதத்தைப் பெருக்கித்துவள்கின்றார் என்கை.

 

English Translation

You stand in all beings everyday and everywhere, in my body, in my soul and in all the things without exception, I ponder and ponder, seek and seek, and try to see you in my soul.  Alas, I have only a loose tongue, but no faculty!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top