(3147)

(3147)

சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,

ஆதி மூர்த்தியென் றாலள வகுமோ?,

வேதி யர்முழு வேதத் தமுதத்தை,

தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.

 

பதவுரை

வேதியர் முழு வேதத்து அமுதத்தை

வைதிகர்களால்  ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும்

தீது இல் சீர்

தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை

யுடையனுமான

திருவேங்கடத்தானை

திருமலையப்பனைக் குறித்து

சோதி ஆகி

சோதிமயமான திருமேனியையுடையனாய்

எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்

ஆதி

ஸகலஜகத்காரணபூதனான

மூர்த்தி

ஸர்வேச்வரன் (இவன்)

என்றால்

என்று நான் சொன்னால் (அது)

அளவு ஆகுமோ

ஒரு பெருமை யாகுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  நீசனான எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு நித்யஸூரி நிர்வாஹகத்வம் ஒரேற்றமோ வென்றார் கீழ்ப்பாட்டில்; என்னினும் தாழ்ந்தவர்களைத் தேடிப் பெற மாட்டாதேயிருக்கிறவனுக்கு, எனக்குத் தன்னைத் தந்தானென்கிற விதுதான் ஓர் ஏற்றமோவென்கிறாரிப்பாட்டில்

“எல்லாவுலகுந் தொழும் ஆதிமூர்ததி” என்று இவர் கீழே சொல்லியிருந்தாலன்றோ இப்போது * எல்லாவுலகுந் தொழுமாதிமூர்த்தி யென்றாலளவாகுமோ?* என்று சொல்லலாம்; கீழ்ப்பாட்டில் அப்படியொன்றுஞ் சொல்லியிருக்கவில்லையே; மூன்றாம்பாட்டில் “வானவரீசனே” என்று சொல்லியிருந்ததனால் நான்காம் பாட்டில் “ஈசன்வானவர்க்கென்ப னென்றால் அதுதேசமோ?” என்று சொன்னது பொருந்திற்று; இங்கு அங்ஙனம் பொருத்தமில்லையே! என்கிற சங்கைக்கு நம்பிள்ளை அருளிச்செய்கிற பரிஹாரத்தின் அழகைக் காண்மின்:- “கீழே *நீசனென் நிறைவொன்றுமிலேன் என்றாரே தம்மை:- தாழ்வுக்குத் தம்மை எல்லாரிலுமவ் வருகாகச் சொன்னாரே; தாம் தொழுதபோதே எல்லா லோகங்களும் விழுக்காட்டாலே தொழுததாயிற்று. ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், கீழ்ப்படி அமிழ்ந்தது என்று சொல்லவேண்டாவிறே” என்பவை ஈட்டு ஸ்ரீஸூக்திகள். இதனால் தேறினது என்னவென்றால், “நீசனென் நிறைவொன்றுமிலேன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே” என்று கீழ்ப்பாட்டில் கூறியதில்* எல்லாவுலகுத் தொழுமென்கிற அர்த்தம் ஸித்தமாகவேயுள்ளது என்று காட்டினபடி. ஒரு காலைசாலையில் மிகவும் மூடனான வொருவன் பரீக்ஷை தேறிவிட்டானென்றால் மற்றையோர்கள் தேறினாரீகளென்பது எப்படி ஸித்தமோ அப்படியே ஆழ்வார்தாம் தொழுதமை சொன்னவளவில் எல்லாவுலகும் தொழுதமை சொன்னபடியே யாகுமென்க. என் கண் பாசம் வைத்தது ஒரேற்றமோ? என்றபடியாயிற்று முன்னடிகளால்.

இது ஏற்றமன்று என்று சொல்லலாம்படி. இப்போது ஆழ்வார் அருளிச் செய்கிற குணோத்கர்ஷம் ஏதென்னில்; தீதில் சீர்த்திருவேங்கடத்தான் என்ற சொல்லின் ஆழ்பொருளைக் காணவேண்டும். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி- “எல்லாவுலகுந்தொழும் என்றதிற்காட்டில் தீதில்சீர் என்றவிடத்தி லேற்றம் என்னென்னில்; என்னை விஷயீகரித்தா னென்றவிது ஒரேற்றமோ? என்னில் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினியிட்டு *‘ஆசயா யதிவா ராமா’* என்கிறபடியே அவஸர ப்ரதீக்ஷனாயிருக்கிறவனுக்கு? * நீசனேன் நிறைவொன்றுமிலேனென்ற இவருடைய குற்றத்தை குணமாகக் கொண்டு ஸ்வீகரித்து, இவருக் கவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமலே நிற்கிறானாயிற்று.” என்பதாம்.

தீதில்சீர் என்ற விசேஷண ஸ்வாரஸ்யத்தை ஆழ்ந்து அறிந்து நம்பிள்ளையருளிச் செய்துள்ள அர்த்த விசேஷம் மிகவும் ரஸிக்கத்தக்கது. சீர்க்குத் தீதில்லாமை எப்போது தேறுமென்னில் *நீசனேன் நிறைவொன்று மிலேனென்று சொல்லுகிற இவரைக் காட்டிலும் மிகவும் நீசனான ஒரு வ்யக்தியைத் தேடிப்படித்தால் தான் தேறும்; உண்மையில் அப்படிப்பட்ட வ்யக்தி உலகத்தில் கிடையாமையாலே எம்பெருமானுக்குக் கிடைக்கவில்லை; கிடைக்காவிடினும், என்றைக்காவது அப்படிப்பட்டவொரு வ்யக்தி கிடைக்காமற் போகமா என்கிற நசையினால் திருமலையில் வீற்றிருத்தலும் சயனித்துலுமின்றிக்கே நின்று கொண்டே தேடுகிறபடியைக் காட்டுகிறானாம் திருவேங்கடமுடையான். அதை ஆழ்வார் அனுஸந்தித்து இப்பாசரம் அருளிச் செய்கிறார் கிடீர்.

வேதியர் முழுவேதத்தமுதத்தை = வேதியர்களென்று வேதமோதுகிறவர்களைச் சொல்லகிறது. அத்யயநம் செய்பவர்களையிட்டு நிரூபிக்கப்படுவன வேதங்கள் ஆதர்வணம் தைத்திரீயம் காண்வம் என்று. ஆக, வேதியர்களையிட்டு  நிரூபிக்கப்படுவனவான ஸகல வேதங்களிலும் பரம போக்யபூதனாயிருக்கின்ற எம்பெருமான் வேதாதிகார மற்றவர்களுக்கும் எளியதனாய்த் திருமலையில் ஸேவை ஸாதிக்கின்றானென்றாராயிற்று.

 

English Translation

The glorious Venkatam Lord is the nectar of the Vedas, fitst-cause of all.  Can he be praised?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top